முகப்பு
செய்திகள்

இயக்குநர் ஷங்கரை சென்னையில் சந்தித்த நடிகர் ராம் சரண்

இந்தியன் 2 வழக்கு தொடர்பான சிக்கலில் இருந்து விடுபட்டுள்ள ஷங்கரை நடிகர் ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர்...

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:

இயக்குநர் ஷங்கரை நடிகர் ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் சென்னையில் சந்தித்து பட விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

லைகா நிறுவனம் இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்தது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு படம் ஒன்றை ஷங்கர் இயக்கப்போவதாக தகவல் வெளியானதால் இந்தியன் 2 திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை ஷங்கர் இயக்கத் தடை கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடா்ந்தது. இந்தியன் 2 திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநா் ஷங்கருக்கு தடை விதிக்க கோரிய லைகா நிறுவனத்தின் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருடன் இணைந்து இரு படங்களை ஷங்கர் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.

ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராம் சரணின் 15-வது படம் இது. 

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வரும் ராம் சரண், அடுத்ததாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் - ராம் சரண் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் எனத் தெரிகிறது. 

இந்நிலையில் இந்தியன் 2 வழக்கு தொடர்பான சிக்கலில் இருந்து விடுபட்டுள்ள ஷங்கரை நடிகர் ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் சென்னையில் நேற்று சந்தித்து பட விவாதத்தில் ஈடுபட்டார்கள். இதுகுறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஷங்கர் - ராம் சரண் படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →