பாகுபலி இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, சென்னையில் இளையராஜாவைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளரான எம்.எம்.கீரவாணி, தமிழில் மரகதமணி என்ற பெயரில் அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, ஸ்டூடண்ட் நம்பர் 1 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் எம்.எம்.கீரவாணி, இயக்குநர் ராஜமௌலியின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இசையமைப்பில் உருவான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் உலக அளவில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்து வரும் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். பாகுபலிக்குப் பிறகு இந்தப் படம் உருவாகிவருவதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
இளையராஜாவின் இசையின் பெருமைகளை அவர் அவ்வப்போது தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக புகழ்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னைவந்துள்ள அவர் இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்தின் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்பு அதனைப் பகிர்ந்த அவர், இந்த கட்டடத்தின் முன்பு செல்ஃபி எடுத்துக்கொண்டதால் இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்பு இளையாராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், முன்பு சொன்னது போல் அந்த செல்ஃபிக்கு பலன் கிடைத்து விட்டது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது பதிவில் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.