தமிழகக் கோயில்களைப் பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்துக்கு நடிகை கங்கனா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஈஷா யோக மையத்தின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தமிழக கோயில்களை அறநிலையத்துறையிடமிருந்து விடுவிக்க வலியுறுத்தி ‘கோயில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தைத் தொடங்கி ஆதரவு திரட்டி வருகிறாா். தமிழகக் கோயில்களை மீட்டெடுப்போம் என்கிற கோரிக்கையுடன் ட்விட்டரில் ஜக்கி வாசுதேவ் தொடர்ந்து பதிவுகள் எழுதி புகைப்படங்கள், விடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். கோயில்களை அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஜக்கி வாசுதேவ் கோரிக்கைக்கு சந்தானம் உள்பட திரையுலகப் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்தில் ட்விட்டரில் ஜக்கி வாசுதேவ் கூறியதாவது:
கோடிக்கணக்கான பக்தர்கள் இதயம் கோயில்களின் நிலை கண்டு இரத்தம் சிந்துகிறது. இது வெறுமனே வேதனையில் முடியக்கூடாது. நம் ஜனநாயக உரிமையை நிலைநாட்டி தமிழக கோயில்களை விடுவித்து பக்தர்களிடமே ஒப்படைக்க அரசியல் கட்சிகளிடம் வாக்குறுதி பெறுவதற்கான நேரமிது என்றார்.
இந்நிலையில் ஜக்கி வாசுதேவின் ட்வீட்களை ரீட்வீட் செய்து அவருக்கு ஆதரவளித்து வருகிறார் பிரபல நடிகை கங்கனா ரணாவத். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
இது இதயத்தைப் பிளக்கிறது. நம்முடைய நாகரிகத்தை என்ன செய்து வைத்துள்ளோம்? நாம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்துக்கு ஆதரவு அளிக்காததற்காக நாம் வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.