கரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட நண்பர்கள் தங்கள் பேரன்பை என்மீது இடையறாது பொழிந்தவண்ணம் இருந்தார்கள் என ஃபேஸ்புக்கில் இயக்குநர் வசந்தபாலன் எழுதியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ், அபர்னதி நடிப்பில் ஜெயில் என்கிற படத்தை இயக்கியுள்ளார் வசந்தபாலன். ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார். ஜெயில் படம் விரைவில் வெளிவரவுள்ளது. தனது விருதுநகர் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வசந்தபாலன் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குகிறார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் வசந்தபாலன். இதையடுத்து தனது உடல்நிலை பற்றி ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவுகள் எழுதி வருகிறார். சமீபத்தில் அவர் எழுதியதாவது:
எனக்கு பெருந்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு உலகம் முழுக்க உள்ள நண்பர்கள் தங்கள் பேரன்பை என்மீது இடையறாது பொழிந்தவண்ணம் இருந்தார்கள். அன்பின் பெருமழையில் நனைந்து ஒரு மீனாய் கருணையின் நதியில் நீந்திச்சென்ற வண்ணம் இருந்தேன். ஆனாலும் ஆழ்மனதில் ஏதோ ஒரு துக்கம் அடைத்தவண்ணம் இருந்தது. பிரிய நண்பனின் குறுஞ்செய்திக்கு பதிலளிக்கையில் காலங்காலமாக மனதிற்குள் உறைந்து கிடந்த கண்ணீர்க்கடல் உடைந்து சிறியதாக கண்ணீர் கசியத்துவங்கியது.
எத்தனை பேரன்பைக் கண்ட பிறகு எனக்குள்ளிருந்து வெளியேறிய சிறு கண்ணீர்த்துளி அத்தனை ஆனந்தம் தருவதாக இருந்தது. இந்த இரவின் ஆழ்ந்த உறக்கத்திற்கான மொத்த யாமத்தையும் குடித்தது போல இருந்தது. பிறந்த குழந்தைப் போன்று சிரித்தபடி உறங்குகிறேன். நாளை எழும் வெய்யோனை இன்னும் ஆழப்பற்றி எழுவேன் என்றார்.
மற்றொரு பதிவில் அவர் கூறியதாவது:
How r u?
I m fine.
இந்த இரண்டு தொடர்களும்
இரட்டைக்கிளவி போல
எந்த உணர்ச்சியும் அற்ற சொற்றொடர்கள்.
பொய் என்று அறிந்தே உச்சரிப்போம்.
பதிலுரைப்போம்.
பெருந்தொற்றில் இருக்கும் போதும்
இதே சொற்றொடர்கள்
அன்னிச்சையாக I m fine என்று பதிலுரைக்கிறேன்.
இந்த சமூகத்திற்கு சொல்ல
இதை விட தித்திப்பான வார்த்தை
இதை விட நம்பிக்கையான வார்த்தை
இதை விட நல்ல உண்மை என்று
எதுவும் என்னிடமில்லை
இன்னும் உலகம் கேட்க
உரக்கச் சொல்வேன்
I m fine
I m fine
I m fine
என்று எழுதியுள்ளார்.