முகப்பு
செய்திகள்

நாய் சேகர் படத்துக்கு பிரபல இசையமைப்பாளரைப் பரிந்துரைத்த வடிவேலு: இசையமைப்பாளரின் பதில் என்ன தெரியுமா?

நாய் சேகர் படத்துக்கு இசையமைக்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெயரை நடிகர் வடிவேலு பரிந்துரைத்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
கோப்புப்படம்
பகிர்:


நாய் சேகர் படத்துக்கு இசையமைக்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெயரை நடிகர் வடிவேலு பரிந்துரைத்துள்ளார்.

நடிகர் வடிவேலு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் தனது புதிய படமான நாய் சேகர் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ-வுடன் மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார் வடிவேலு.

அப்போது அவர் கூறியது:

"இன்று என்னுடைய பிறந்தநாளுக்கு மக்களுடைய ஆசீர்வாதம், வாழ்த்து நிறைய கிடைத்துள்ளது. லைகா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பேசினார். உதயநிதி பேசினார். மகிழ்ச்சியாக இருந்தது."

இதைத் தொடர்ந்து, பட இசையமைப்பாளர் பெயரை அறிவிக்குமாறு அருகிலிருந்த இயக்குநரை வடிவேலு கேட்டுக்கொண்டார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக இயக்குநர் தெரிவித்தார்.

இதன்பிறகு, வடிவேலு மீண்டும் பேசியது:

"சந்தோஷ் நாராயணன் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என லைகா சிஇஓ-விடம் பரிந்துரைத்தேன். இதையடுத்து, இயக்குநர் மூலம் அவரைத் தொடர்புகொண்டோம். 

தொலைபேசியில் அழைத்தவுடனே, 'என் தலைவன் வடிவேலு எங்கே, அலைபேசியை அவரிடம் கொடுங்கள் முதலில், அவருக்கு இசையமைப்பதுதான் எனக்கு முதல் வேலை. தலைவா, தலைவா என்று பேசினார்.' அதைக் கேட்டு எனக்கு ஒன்றும் புரியவில்லை. மிகவும் சந்தோஷப்பட்டேன்.

உங்கள் நகைச்சுவைக்கு நான் அடிமை, உங்கள் படத்துக்கு லைகா தயாரிப்பு நிறுவனம் மூலம் இசையமைப்பது ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது என்று சந்தோஷ் நாராயணன் கூறினார்." என்றார் வடிவேலு. 

இதைத் தொடர்ந்து, வடிவேலுவைப் பாட வைத்தே ஆக வேண்டும் என சந்தோஷ் நாராயணன் தெரிவித்ததாக இயக்குநர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.