முகப்பு
செய்திகள்

விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை இயக்கவிருக்கும் சசிகுமார், ஆனால்... - புதிய தகவல்

விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை சசிக்குமார் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:49 PM
பகிர்:

விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை சசிக்குமார் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சசிகுமார் தயாரித்து இயக்கிய 'சுப்ரமணியபுரம்' இன்றளவும் தமிழ் சினிமாவின் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் கூட இந்தப் படம்தான் தனது 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்துக்கு முன்னோடி என்று தெரிவித்திருந்தார். 

'சுப்ரமணியபுரம்' படத்துக்கு பிறகு சசிகுமார் இயக்கிய 'ஈசன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சசிகுமாரும் முழு நேர நடிகராக மாறினார். சசிகுமார் எப்பொழுது மீண்டும் திரைப்படம் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்துவந்தது. அந்த அளவுக்கு ரசிகர்களிடயே சுப்ரமணியபுரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சமீபத்தில் சசிகுமாரின் சுப்ரமணியபுரம் 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் விரைவில் புதிய படத்தை இயக்கவிருப்பதாக சசிகுமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தை சசிகுமார் இயக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. 

தற்போது அது படம் இல்லை, இணையத் தொடர் என்று கூறப்படுகிறது. எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவலை இணையத்தொடராக சசிகுமார் இயக்கவிருக்கிறார். முன்னதாக இந்தத் தொடரை யார் இயக்குவது என்ற போட்டி இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலா இருவரிடையே நிலவிவந்தது. ஆனால் இருவருமே இயக்கவில்லை. 

தற்போது சசிகுமார் குற்றப்பரம்பரையைக் கையிலெடுத்திருக்கிறார். இதற்காக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறதாம். இந்தப் படத்துக்காக சண்முக பாண்டியன் தயாராகிவருகிறார். மேலும் ராணா மற்றும் சசிகுமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்க்கலாம். 

முழு கட்டுரையைப் படிக்க →