தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி திருப்புமுனையாக அமைந்தது.
இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்துவருகிறார்.
கே.ஜி.எஃப்., காந்தாரா படத்தினை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷின் புதிய பட போஸ்டரை வெளியிட்டு, “புரட்சி குடும்பத்தில் இருந்துதான் தொடங்குகிறது. தயாராகுங்கள்” என தமிழில் பதிவிட்டுள்ளது.
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு ‘ரகு தாத்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. படக்குழுவுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், “ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி ரகுதாத்தா!” பிரபலமான வசனத்தை ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.
சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை ஷான் ரோல்டன். ஒளிப்பதிவு- யாமினி யோக்னாமூர்த்தி.