’மெட்டி ஒலி கோபி’ என பலரால் அறியப்படும், இயக்குநர் திருமுருகன் மீண்டும் சின்னத் திரை தொடர் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு உள்ளிட்ட வெற்றித் தொடர்களை இயக்குநர் திருமுருகன் இயக்கியுள்ளார்.
2002ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' தொடர் மூலம் கோபி என மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர்.
அதனைத் தொடர்ந்து வெள்ளித் திரையின் நடிகர் பரத் நடிப்பில் உருவான 'எம்-மகன்' திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் தமிழக அரசின் விருதைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பரத்துடன் இணைந்து 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' எனும் படத்தை இயக்கினார்.
திரைப்படங்களை இயக்கினாலும், மீண்டும் சின்னத் திரையில் தொடர்களை தொடர்ந்து அவர் இயக்கி வந்தார். சின்னத் திரையில் முதல் முதலில் நேரலையில் எடுக்கப்பட்ட தொடர் உள்ளிட்ட பல சாதனைகளைப் புரிந்துள்ளது திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம்.
கிராமப் பின்னணிகளை மையமாக வைத்து நீண்ட ஷாட்களின் மூலமும் அடர்த்தியான வசனங்களின் மூலமும் அவரின் தொடர்கள் மற்ற தொடர்களிலிருந்து மாறுபடுபவை.
தற்போது திருமுருகன் மீண்டும் சின்னத் திரை தொடர் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.