சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' மார்ச் 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. சன் பிக்ரச்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
முன்னதாக சூர்யா தயாரித்து நடித்த பசங்க 2 படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தையும் சூர்யா தயாரித்திருந்தார். இந்த நிலையில் மூன்றாவது முறையாக பாண்டிராஜ் மற்றும் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தில் இணைந்துள்ளனர்.
டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். நந்தா, வாரணம் ஆயிரம் படங்களுக்கு பிறகு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு சூர்யாவுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சிறப்புப் படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.