விக்ரமின் 'கோப்ரா': கூடுதல் செலவானதாக இயக்குநர் - தயாரிப்பாளருக்கிடையே மோதல்: ரசிகர்கள் அதிர்ச்சி
விக்ரமின் கோப்ரா படத்துக்கு திட்டமிட்ட பட்ஜெட்டை விட கூடுதல் செலவானதாக இயக்குநர் அஜய் ஞானமுத்துவை தயாரிப்பாளர் டி.சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
கோப்ரா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாடினர். இதனையடுத்து நடிகர் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரபல தயாரிப்பாளர் டி.சிவா, ''பட்ஜெட்டை விட செலவு அதிகரித்து, அதற்கான வட்டி அதிகரித்ததையும் பொறுத்துக்கொண்டு, கடந்த 3 வருடங்களாக இந்த படத்தை உருவாக்க உதவிய தயாரிப்பாளருக்கு நன்றி கூட சொல்லவில்லை. இயக்குநரை வன்மையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
இதையும் படிக்க | 'இளையராஜாவால் ஒன்னும் பண்ண முடியாது': இயக்குநர் மிஷ்கின் அதிரடி
அதற்கு பதிலளித்த அஜய் ஞானமுத்து, ''மரியாதையுடன் பதிலளிக்கிறேன். கோப்ரா படத்தின் பட்ஜெட் உயர்வுக்கு நான் காரணமில்லை. ஆதாரம் நிச்சயம் பேசும், வதந்திகளை பொய்யாக்கும். நான் என் குழுவினருக்கு என்று குறிப்பிட்டது தயாரிப்பாளரையும் சேர்த்து தான். அவரை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்'' என்று ககுறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் டி.சிவா, ''உனது பதிலுக்கு நன்றி அஜய், வதந்தியாக இருந்தாலும் அது பேசி தீர்க்கப்பட வேண்டும். நடிகர் விக்ரமிற்கு நன்றி சொல்லி குறிப்பிட்டபோது நிச்சயம் தயாரிப்பாளரின் பெயரையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதனை ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். நன்றி. வாழ்த்துகள்'' என்று பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து அஜய் ஞானமுத்து, ''இது வேண்டுமென்றே செய்யவில்லை. நான் எப்பொழுதும் என் தயாரிப்பாளரை உயர்வாகவே கருதுகிறேன்'' என்று பதிலளித்தார்.