மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழக வசூலில் சாதனை பெற்றுள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது.
இதையும் படிக்க: ஜஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ வெளியீடு குறித்து தகவல்
பொன்னியின் செல்வன் படம் முதல் நாளன்று உலகளவில் ரூ. 80 கோடியை வசூலித்ததாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்த் திரையுலகில் ஒரு படத்துக்குக் கிடைத்த அதிகபட்ச முதல் நாள் வசூல் என இதுகுறித்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அப்பாடம் முதல் 4 நாள்களில் உலகளவில் ரூ. 250 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வார இறுதியில் உலகளவில் இப்படம் ரூ.500 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு தமிழில் வெளியான வலிமை, பீஸ்ட், கேஜிஎஃப் 2, விக்ரம் ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலைக் கடந்திருந்தன. தற்போது, அப்பட்டியலில் பொன்னியின் செல்வனும் இணைந்திருக்கிறது.