தோனியை இயக்கிய விக்னேஷ் சிவன்: நடந்தது என்ன ? - நெகிழ்ச்சியான பதிவு
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை விக்னேஷ் சிவன் இயக்கியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பரப் படத்துக்காக இயக்கியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவை எழுதியுள்ளார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ''என்னுடைய அம்மா காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவரிடம் ஐபிஎல் வீரர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. எனது அம்மா பிராவோவிடம் தமிழில் பேசுவதைப் பார்த்தேன்.
என் அம்மாவிடம் அனுமதி வாங்கி வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்று விடுதியின் முனையில் நின்று தோனியைப் பார்த்தேன். என் நான் வாழ்நாள் முழுவதும் அவரை பின்தொடர்ந்து வருகிறேன். நான் அவரது வெறித்தனமான ரசிகன் மற்றும் அவரது மாணவன்.
நான் படப்பிடிப்பில் இருக்கும்பொழுது, என் தோல்வியின்பொழுது, வெற்றியின்பொழுது அல்லது வாழ்வின் எந்தத் தருணத்திலும், அந்த இடத்தில் தோனி எப்படி கையாள்வார் என்று கற்பனை செய்து அதன்படி நடந்துகொள்வேன். நான் சினிமாவில் குழுவினர் 100 பேருடன் பணியாற்ற வேண்டியிருக்கும். அதற்கு தலைமை பண்பு வேண்டும். அப்போது நான் என் தலைவரைப் பின்பற்றுவேன்.
Advertisement
இதையும் படிக்க | பிரபல தயாரிப்பாளரின் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்
மீண்டும் என் அம்மாவின் கதைக்கு வருகிறேன். தோனி விடுதியில் தங்கியிருக்கும்போது அவரைப் பார்க்க நீண்ட நேரம் நின்றுகொண்டிருப்பேன். அவர் வேகமாக வந்து அறைக்குள் சென்றுவிடுவார். பேருந்தை நிறுத்த இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்திருக்கலாம் என்று நினைப்பேன்.
ஒருநாள் என் அம்மா, தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். என்னால் எடுக்க முடியவில்லை. என் அம்மாவுக்கு வாய்ப்பு இருந்தும் எனக்கு உதவ முடியாமல்போனது. அவரை சந்தித்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவாக இருந்தது.
அது நடந்தது. சிஎஸ்கே அணிக்காக ஒரு சிறிய விளம்பர படத்துக்காக அவரை இயக்குவதற்கு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் 36 முறை அவருக்கு ஆக்சன் சொன்னேன். ஒவ்வொருமுறையும் ஆக்சன் சொல்லும்போது கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
படப்பிடிப்பு இடைவேளையின்போது அவருடன் என் அம்மா எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டினேன். பிறகு என் அம்மாவை வரவழைத்து அவரை சந்திக்க செய்தேன். அவர் மிக தன்னடகத்துடன் இருந்தார். அவர் மிக இனிமையாவர். நீண்ட நாள் கனவு நினைவானது. என்று குறிப்பிட்டுள்ளார்.