கடலூர்: வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா!
திருவதிகையில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புகழ் பெற்ற இக்கோயிலில் திருவாசக முற்றோதல் பெருவிழா 27}ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.இதையொட்டி, கடந்த புதன்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் திருவாசக முற்றோதல் பெருவிழா தொடங்கியது. திருவாசக சித்தர் திருக்கழுக்குன்றம் சிவ தாமோதரன் கலந்து கொண்டு திருவாசக பன்னிசைத்து திருவாசக முற்றோதலை தலைமையேற்று நடத்தினார்.
Advertisement
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று திருவசாகம் முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியில் பண்ருட்டியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவதிகை திலகவதியார் திருநாவுக்கரசர் இறைபணி மன்றத்தினர் செய்திருந்தனர்.