அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இப்படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் மக்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் படம் ரூ. 862 கோடி வசூலித்துள்ளது.
இதையும் படிக்க: இயக்குநர் சந்தீப்பின் விசிலால் உருவாகிய பின்னணி இசை: இசையமைப்பாளர் பகிர்ந்த சுவாரசிய விடியோ!
பெண்களுக்கு எதிரான படமென விமர்சித்ததால் இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தினை கிளப்பியது. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் பிரணய் ரெட்டி வங்கா. இவர் இயக்குநரின் சகோதரர் ஆவார். அவர் சமீபத்திய நேர்காணலில் கூறியதாவது:
பாலிவுட்டில் பணம் கொடுத்து புக்கிங் செய்யும் முறையான கார்ப்பரேட் புக்கிங் கலாச்சாரம் இருக்கிறது. ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. எங்களது வசூல் விவரம் நூறு சதவிகிதம் உண்மையானது. அதனால்தான் மக்கள் உங்களது தகவல்கள் சரியாக இருப்பதாக கூறுகிறார்கள். மேலும், பாலிவுட்டில் ஒரு ஆங்கிலம் பேசும் விமர்சன கும்பல் இருக்கிறது. அவர்கள் குறிப்பிட்ட ஒரு வகையான படங்களை மட்டுமே நன்றாக இருப்பதாக புரமோஷன் செய்கிறார்கள். மற்றவகையான படங்களுக்கு மோசமான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
அவர்கள் ஒரு சொகுசு பங்களாவில் இருந்துக்கொண்டு விமர்சனம் வைக்கிறார்கள். இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 2ஆம், 3ஆம் வகுப்பு இரயில்களில் பயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் நிலைமை தெரியும்.
இன்னும் சொல்லப்போனால் தென்னிந்திய கலைஞர்களை ஒடுக்க நினைக்கிறார்கள். ராஷ்மிகா -நேஷ்னல் க்ரஷ் விஷயத்தில் நடந்ததும் அதுதான். பாலிவுட்டில் சிலர் இன்னும் அப்படி இருக்கிறார்கள். சந்தீப்பையும் காலி செய்ய நினைத்தார்கள். டி சீரிஸ் உதவியுடனும் மக்களின் ஆதரவுடனும் மீண்டு விட்டோம். எப்படியும் ஒரு 30-40 கோடி வசூலில் பாதிப்படைந்திருக்கும். ஏ சான்றிதழ், ரன்னிங் டைம் அதிகம் அதனாலேயே வசூலில் சிறிது பாதிப்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் மகிழ்ச்சி. சந்தீப்பும் மகிழ்ச்சி எனக் கூறினார்.