விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.
இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது அவர், சூப்பர் சிங்கர் 9வது சீசனிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத் திரை தொடர்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
குடும்பத் தலைவிகள், முதியோர், இளைய தலைமுறையினர் என அனைத்துத் தரப்பு மக்களும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏதேனுமொரு நிகழ்ச்சிக்கு விசிறியாகியிருப்பார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அனைத்துத் தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.
தமிழுலகத்தின் பிரமாண்ட குரலுக்கான தேடல் என்ற வரியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று புகழ் வெளிச்சம் பெற்றவர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று பாடியவர்கள், தற்போது வெள்ளித் திரையில் வெற்றிகரமான பின்னணிப் பாடகர்களாக வலம் வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வந்தனர். நகைச்சுவையாக அவர்கள் தொகுத்து வழங்கும் விதம் பலரைக் கவர்ந்த ஒன்று.
தற்போது சூப்பர் சிங்கர் 9-வது சீசன் தொடங்கவுள்ளது. இந்த சீசனிலிருந்து மாகாபா ஆனந்த் விலகியதாகத் தெரிகிறது. மேலும், அவருக்கு பதிலாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரியோ ராஜ் தொகுத்து வழங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான முன்னோட்ட (புரோமோ) விடியோவில் பிரியங்காவுடன் ரியோ ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போன்று காட்சிகள் உள்ளது. இதனால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து மாகாபா விலகியது உறுதியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், ரியோ ராஜுக்கு வரவேற்பு இருந்தாலும் மாகாபா ஆனந்தின் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாகவே உள்ளது.