'காவல்துறைக்கும் அமைச்சருக்கும் கடும் கண்டனங்கள்..’: பா.இரஞ்சித்
புதுக்கோட்டையில் சமூகவிரோதிகள் குடிநீரில் மலத்தை கலந்த விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் சமூகவிரோதிகள் குடிநீரில் மலத்தை கலந்த விவகாரத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டைமாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குள்பட்ட இறையூா் கிராமத்தில் வேங்கைவயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் குடியிருந்து வருகின்றனா். இம்மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரில் சமூகவிரோதிகள் மலத்தை கலந்ததால் அதனைப் பருகிய சிறுவா், சிறுமிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தைக் குறிப்பிட்ட இயக்குநர் பா.இரஞ்சித், ‘தொடரும் சமூக அநீதி. புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்! வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்!’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.