சின்னத்திரையில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே தொடர் 772 எபிஸோடுகளுடன் முடிந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக பிரைம் டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே தொடரும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது இந்தத் தொடர் 772 எபிஸோடுகளுடன் மார்ச் மாதத் தொடக்கத்துடன் நிறைவடைந்துள்ளது.
இந்தத் தொடரில், பப்ளூ பிரித்விராஜ், நிமிஷிதா, ராகுல் ரவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தந்தையின் பாசத்துக்காக ஏங்கும் நாயகிக்கு கணவனாக வரும் நாயகன் தந்தையின் பாசத்தைப் பெற்றுத்தர உதவுகிறான். தந்தையின் பாசத்துக்காக நாயகி என்னென்ன தியாகங்களை முயற்சிகளை மேற்கொள்கிறாள் என்பதே கண்ணான கண்ணே தொடரின் அடிப்படைக் கதை.
(நாயகி) நிமிஷிதா, (நாயகன்) ராகுல் ரவி இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.
கண்ணான கண்ணே தொடரின் இறுதி எபிஸோடில் நாயகிக்கு (மீரா) பிரசவம் பார்ப்பதற்காக வருபவர், மீராவின் தாயார் என்பது ரசிகர்களுக்கு எதிர்பாராத சஸ்பென்ஸாக இருந்தது. தாய் பிரசவம் பார்க்க குழந்தை பெற்று தனது தந்தையிடம் கொடுக்கும் நாயகியின் காட்சிகள் மிகுந்த கவனம் பெற்றவையாக இருந்தன.
நல்ல நெடுந்தொடருக்கான நிறைவான இறுதிக்கட்டமாக கண்ணான கண்ணே தொடர் இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தொடருக்கு மகேந்தர், பாரதி கண்ணன் கதை எழுதினர். நரசிம்ம மூர்த்தி, நல்லம் ஆகியோர் வசனம் எழுத தனுஷ் இயக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.