முகப்பு
செய்திகள்

வணங்கான் - நம்பிக்கையில் அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் வணங்கான் திரைப்படத்தை பெரிதும் நம்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
பகிர்:

நடிகர் சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பின் இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.

படத்தின் படப்பிடிப்பும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்தில் கன்னியாகுமரியில் சில நாள்கள் நடைபெற்றது. ஆனால், பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால், சூர்யா தன் அடுத்த படத்தில் நடிக்கச் சென்றார்.

சூர்யாவுக்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தம்பி சூர்யா படத்திலிருந்து விலகிக் கொள்கிறார். இது இருவரும் இணைந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து, இப்படத்தின் நாயகனாக அருண் விஜய்யும் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கினும் நடித்து வருகின்றனர்.

வணங்கான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாள்களில் முடிய உள்ளதால் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா தீவிரம் காட்டி வருகிறார்.

மேலும், இப்படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வந்தது. 

இந்நிலையில், ’கங்காரு’, ‘மாநாடு’, ‘ஜீவி - 2’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி இப்படத்தின் தயாரிப்பு உரிமையைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தில் சாதாரண மீனவர் தோற்றத்தில் நடித்திருக்கும் அருண் விஜய் இப்படத்தை பெரிதும் நம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் நடிப்பில், இறுதியாக வெளியான யானை, சினம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.