முகப்பு
செய்திகள்

‘ஆடு ஜீவிதம்’ எழுத்தாளர், இயக்குநரால் ஏமாற்றப்பட்டேனா? நஜீப் விளக்கம்!

ஆடு ஜீவிதம் திரைப்படத்தின் மூலம் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நஜீப் விளக்கமளித்துள்ளார்.

Updated On : 4 ஏப்ரல், 2024 at 9:46 AM
எழுத்தாளர் பென்யாமினுடன் நஜீப்! (இடமிருந்து வலம்)
பகிர்:

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜுன் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.

பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த மார்ச் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நடிகர் பிருத்விராஜின் நடிப்பும் படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன. உலகளவில் ரூ.85 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

என்ன கதை?

1990-களில் கேரள மாநிலம் ஆழாப்புழாவைச் சேர்ந்த நஜீப் என்பவர் பிழைப்பிற்காக சௌதி செல்கிறார். ஆனால், அங்கு பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் அடிமையாக மாற்றப்பட்டு கடும் சித்திரவதைகளை அனுபவிக்கிறார். சில ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின், நஜீப் அங்கிருந்து தப்பிக்கிறார்.

கிட்டத்தட்ட உயிரைப் பிடித்துக்கொண்டு கேரளம் திரும்பிய நஜீப் கூலி வேலை செய்து வாழ்வைக் கழித்துக்கொண்டிருந்த நேரத்தில், பிரபல மலையாள எழுத்தாளர் பென்யாமின், சௌதியில் நஜீப் பட்ட துன்பங்களைக் கேட்டு ‘ஆடு ஜீவிதம்’ என்கிற நாவலை எழுதுகிறார். நாவல் வெளியானதும், நஜீப் என்கிற மனிதன் பட்ட துயரங்களும் அலைக்கழிப்புகளும் பலரையும் தொந்தரவு செய்கிறது. நாவலைத் தழுவியே ஆடு ஜீவிதம் படமும் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ஆடு ஜீவிதம் நாவலில் இடம்பெற்ற பல தகவல்கள், சம்பவங்கள் படத்தில் இணைக்கப்படவில்லை என்கிற கருத்துகளும் எழுந்துள்ளன.

முக்கியமாக, எழுத்தாளர் பென்யாமின், நாவலில் நஜீப்பிற்கும் ஆடுகளுக்கும் இடையேயான அந்தரங்க விஷயங்கள் படப்பிடிப்பின்போது காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியத்தால் அக்காட்சிகள் நீக்கப்பட்டது எனக் கூறியிருந்தார்.

ஆனால், அப்படியான எந்தக் காட்சிகளையும் எடுக்கவில்லை என்ற இயக்குநர், பென்யாமின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.

இதனால், சமூக வலைதளங்களில், “எழுத்தாளர் மற்றும் இயக்குநர் இருவரும் இணைந்து பாவப்பட்ட மனிதனின் வாழ்க்கையைச் சினிமாவாக மாற்றி புகழையும் பணத்தையும் சேர்த்துக்கொண்டனர். ஒரு மனிதனின் நிஜ வாழ்க்கையை சமரசம் செய்து திரைப்படமாக எடுக்க வேண்டிய கட்டாயம் என்ன? இவர்களால், நஜீப் ஏமாற்றப்பட்டிருக்கிறார்.” எனப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தொடர்ந்து, இதுகுறித்துப் பேசிய நஜீப், “சமூக வலைதளங்களில் எழுத்தாளர் பென்யாமினையும் இயக்குநர் பிளஸ்ஸியையும் தாக்கி வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது எனக்கு வலிக்கிறது. பென்யாமின் என் வாழ்க்கையை எழுதியதால்தான் நான் யாரென்றே இந்த உலகத்திற்குத் தெரியவந்தது. என் வாழ்க்கையைப் படித்தவர்களால்தான் என் மகனுக்கு பஹ்ரைனில் வேலையும் கிடைத்தது. இப்போதும், பிளஸ்ஸி எனக்கு எதாவது பணியைப் பெற்றுத் தரவேண்டும் என நினைக்கிறார். நான்தான் அதை மறுத்துவிட்டேன். இருவரும் என்னிடம் நல்ல முறையில் தொடர்பிலிருக்கின்றனர். அவர்களைத் தாக்கிப் பேசுவது வேதனையளிக்கிறது.” என விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.