நடிகர் விஜய்யின் 69-வது படத்தில் நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், சில தோல்வி படங்களைக் கொடுத்தாலும் தொடர் முயற்சியால் தனக்கென்ற ஓரிடத்தை அடைந்தார். சாதாரணக் காதல் கதைகளிலும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்த பின்பே விஜய்யின் மார்க்கெட் அதிகரிக்கத் துவங்கியது.
குறிப்பாக, 2000-களின் துவக்கத்தில் விஜய் நடித்து வெளியான குஷி, பிரியமானவளே, பிரண்ட்ஸ், ஷாஜகான், பகவதி, கில்லி என தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராக மேலேறி வந்தார். அதன்பின்பும், ஸ்டைலான நடிகராக குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக இன்றும் ரசிகர்களின் மனதை ஆளும் தளபதியாகவே நீடிக்கிறார்.
தற்போது, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன் 68-வது படமாக கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார்.
அவர் முழுநேர அரசியலுக்கு வருவதைத் தொடர்ந்து இறுதியாக 69-வது படத்தில் நடிப்பார் என்கிற தகவல்கள் வெளியாகின. அதனால், அவரின் கடைசி திரைப்படத்தின் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் விஜய்யின் 69-வது படத்தை பேசன் ஸ்டூடியோஸ் (passion studios) மற்றும் கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இசையமைப்பாளாராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளியான இவருக்கு தென்னிந்தியளவில் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பிரேமலு. இப்படத்தின் நாயகியாக நடித்து அசத்தியவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.