முகப்பு
செய்திகள்

இளையராஜாவுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை!

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 5:59 AM
பகிர்:

மஞ்ஞுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்.23 ஆம் தேதி திரையரங்களில் வெளியானது. பறவா பிலிம்ஸ் சார்பில் சௌபின் சாகிர், பாபு சாகிர், ஷான் ஆண்டனி ஆகியோர் இப்படத்தை தயாரித்தனர். சௌபின் சாகிர், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முன்னணி பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம், உலகம் முழுவதும் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தது. கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளத்தை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது.

பிரேமம் பட வசூலை பின்னுக்குத்தள்ளி இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை இப்படம் படைத்தது. இப்படத்தில் கண்மணி அன்போடு காதலன்.. என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடல் குணா படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான மிகப் பிரபலமான காதல் பாடல். அதனை மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் நட்புக்கு உரிய பாடலாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். இதனிடையே, மஞ்ஞுமல் பாய்ஸ் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார்.

தன்னுடைய இசையமைப்பில் உருவான பாடலை பயன்படுத்த முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு நோட்டீஸ் விடுத்திருந்தார். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் தவறினால், பதிப்புரிமையை மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நோட்டீசில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, கண்மணி அன்போடு காதலன் பாடலுக்கு உரிய அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்தியதாக மஞ்ஞுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் சான் ஆண்டனி விளக்கமளித்தார்.

இந்த நிலையில், மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் இளையராஜாவுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்கியதாகத் தகவல் வெளியாகியது. ஆனால், மஞ்ஞுமல் பாய்ஸ் குழுவினருக்கும் இளையராஜாவுக்கும் இடையே இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நிகழவில்லை என அவரின் மக்கள் தொடர்பாளர் (பிஆர்ஓ) கூறியுள்ளார். மேலும், இழப்பீடு குறித்து எதுவும் அறியவில்லை என இளையராஜாவின் வழக்கறிஞரும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

குணா படத்தின் பாடல்களின் உரிமையை இளையராஜாவின் மனைவி பிரமிட் ஸ்டூடியோஸ் (pyramid studios) நிறுவனத்துக்கு கொடுத்ததாகவும் அவர்கள் மியூசிக் மாஸ்டர் ஆடியோ விடியோ எல்எல்பி மற்றும் ஸ்ரீதேவி மியூசிக் கார்பரேஷன் நிறுவனங்களுக்கு விற்றதாகவும் மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் இவர்களிடமிருந்தே பாடலின் உரிமையைப் பெற்றதாகவும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →