எப்படியெல்லாம் பெயர் வைக்கிறாங்க..!
ஒரு புதிய தமிழ்ப் படத்தின் பெயர் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படத்தின் கதை என்னவாக இருந்தாலும் நம்மை முதலில் கவர்வது அதன் பெயர்தான். இன்று தூய தமிழில், கலப்புமொழியில், புரியாத மொழியில் அல்லது எதையோ ஒன்றை தேர்ந்தெடுக்கின்றனர்.
ஆரம்பமே இதுதான் என்பதால் படத்திற்கு என்ன பெயர் வைத்தால் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என பலகட்ட யோசனைக்குப் பின்பே பெயர் வைக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
அதிலும் பான் இந்திய திரைப்படங்களென்றால் பிற மொழி ரசிகர்களுக்கும் புரியும்படியாக ஆங்கிலப் பெயர்களே தேர்வு செய்யப்படுகின்றன. தமிழில் அப்படி உருவான படங்களில் ஒன்று நடிகர் விஜய்யின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T).
ஒரு படத்தை நினைவுகூற யாரும் வைக்காத பெயராகவும் அதேநேரம் எளிதாக சொல்லக்கூடிய பெயராகவும் இருக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் நினைப்பது சரிதானே? அந்த வகையில், ஒரு புதிய தமிழ்ப்படத்தின் போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது.
படத்தின் பெயர், “எனக்கு சினிமாவே வேண்டாம். நான் ஊர்பக்கம் போறேன்” படத்தை கே. எஸ். நேசமானவன் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் என அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறார்.
மேலும், “படமெடுத்து பட்டா பட்டிகூட வாங்கமுடியாமல் போன பல தயாரிப்பாளர்களுக்கு இப்படம் ஆறுதல் தரும்” என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
அதுவும் சரிதான், ஊரிலிருந்து நடிகனாக, இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையில் கிளம்பி வந்தவர்களின் கதையெல்லாம் சினிமாவானபோது, காணாமல்போன தயாரிப்பாளர்களுக்கும் ஒரு கதை வேண்டும் அல்லவா?