முகப்பு
செய்திகள்

ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் வரிசையில் சாய் அபயங்கர்?

சாய் அபயங்கர் குறித்து...

Updated On : 11 டிசம்பர், 2024 at 11:39 AM
பகிர்:

சாய் அபயங்கர் அடுத்த தலைமுறை இசையமைப்பாளராக உருவெடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தலைமுறை இடைவெளிகளில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இம்மூவரும் தங்களுக்கான இடங்களைப் பிடித்தவர்கள். இதில், இளையராஜாவும் ரஹ்மானும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் பெரும்பாலான 2கே தலைமுறையின் தேர்வு அனிருத்தாகவே இருக்கிறது.

பின்னணி இசை, பாடல் என அதிரும் இசைகளால் அனிருத் தவிர்க்க முடியாதவராகே பார்க்கப்படுகிறார். இந்தியளவில் பெரிய நடிகர்களுக்கு இசையமைப்பதுடன் உலகளவில் இசை நிகழ்ச்சிகளையும் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், அனிருத்துக்கு அடுத்து 20-வயதான சாய் அபயங்கர் என்கிற இசையமைப்பாளர் பெரிதாகப் பேசப்படுவார் என பலரும் கணித்துள்ளனர்.

காரணம், ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ ஆல்பம் பாடல்களால் இசையமைப்பாளராக, பாடகராகக் கவனிக்கப்பட்ட சாய் அபயங்கரின் இசையில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் பென்ஸ், சூர்யா - 45, பிரதீப் ரங்கநாதன் படம் என அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சாய் அபயங்கர்

சூர்யா - 45 படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க வேண்டியது. சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து விலகியதும் அவருக்குப் பதிலாக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும், இந்தாண்டில் அமேசான் மியூசிக்கில் அதிகம் கேட்கப்பட்ட 3 இசையமைப்பாளர்களில் ரஹ்மான், அனிருத்துடன் அபயங்கரும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இதனால், அனிருத்துக்கு அடுத்த இடத்தை சாய் அபயங்கர் பிடிக்கலாம் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சாய் அபயங்கர் பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →