மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை: பாடகர் சர்ச்சை பேச்சு!
மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையாகப் பேசிய பிரபல பாடகர்.
பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா ஹிந்தி மற்றும் பெங்காளி மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரை இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் 1982 ஆம் ஆண்டு திரைப்படப் பாடகராக அறிமுகப்படுத்தினார். இவர் ஆரம்பக் காலங்களில் பல மேடை கச்சேரிகளில் ஆர்.டி.பர்மனுடன் இணைந்து பாடியுள்ளார்.
பல ஹிந்தி நடிகர்களுக்கு பின்னணி பாடியுள்ள இவரின் குரல் நடிகர் ஷாருக்கானுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஷாருக்கானின் ஆஸ்தானப் பாடகர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் 17 ஆண்டுகளாக ஷாருக்கானுக்கு பல படங்களில் தொடர்ந்து பாடல்களைப் பாடியுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ஒபாமாவின் விருப்பப் பட்டியலில் இந்தியத் திரைப்படம்!
இவர் சமீபத்தில் ஒரு பாட்கேஸ்ட்டில் பேசியபோது, “இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் மகாத்மா காந்தியை விடவும் மேலானவர். மகாத்மா காந்தியை எப்படி தேசத் தந்தை என்று அழைக்கிறோமோ அதேபோல இசையுலக தேசத்தின் தந்தை ஆர்.டி.பர்மன் ஆவார்” என்றார்.
மேலும், “மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை. இந்தியாவிற்கு அல்ல. இந்தியா முன்பிருந்தே இங்கிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது. காந்தியைத் தவறுதலாக இந்தியாவின் தேசத்தந்தை என அழைக்கிறோம். அவர் பாகிஸ்தானின் இருப்புக்கு காரணமானவர்” என்று பேசினார்.
மகாத்மா காந்தி குறித்து அவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அபிஜித் மீது சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.