முகப்பு
செய்திகள்

ரமேஷ் நாராயணால் நடிகர் ஆசிஃப் அலி அவமதிக்கப்பட்டாரா? என்ன நடந்தது?

Updated On : 18 ஜூலை, 2024 at 8:16 AM
பகிர்:

இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் நடிகர் ஆசிஃப் அலியிடமிருந்து விருதைப் பெற மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத் திரையுலகில் அடிக்கடி சர்ச்சைகள் எழுவது வழக்கம்தான் என்றாலும் இம்முறை சமூக வலைதளங்கள் சூடாகும் அளவிற்கு புதிய சர்ச்சை எழுத்துள்ளது.

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதைகளிலிருந்து உருவான ஆந்தாலஜி தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 16 ஆம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் மம்மூட்டி, ஆசிஃப் அலி, இந்திரஜித் சுகுமாரன் உள்பட இயக்குநர்கள் பலர் மேடைக்கு அழைக்கப்பட்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

ஆனால், மூத்த இசையமைப்பாளரான ரமேஷ் நாராயண் அழைக்கப்படவில்லை. அவர், இயக்குநர் ஜெயராஜ் இயக்கியிருந்த கதை ஒன்றிற்கு இசையமைத்திருந்தார். தொடர்ந்து, 8 இயக்குநர்கள் 9 கதைகளை படமாக இயக்கியிருப்பதால், ஒவ்வொரு குழுவினருக்கும் நினைவு விருது வழங்கப்பட்டன. அதை மேடைக்குச் சென்றே அனைவரும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், ரமேஷ் நாராயணுக்கும் நினைவு விருதைக் கொடுப்பதாக அறிவித்தனர். ஆனால், அந்த விருதிற்காக அவரை மேடைக்கு அழைக்காமல், அவர் அமர்ந்திருந்திருந்த இடத்திற்கே விருதைக் கொண்டு சென்று நடிகர் ஆசிஃப் அலி கொடுத்தார். ஆனால், ரமேஷ் நாராயண் ஆசிஃப் அலியிடமிருந்து விருதைப் பெற மறுத்து, இயக்குநர் ஜெயராஜின் கைகளில் கொடுத்து அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இச்சம்பவம்தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மலையாளத் திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் ஆசிஃப் அலியை, பொது நிகழ்வில் வைத்து அவமதித்துவிட்டார் என சமூக வலைதளங்களில் ரமேஷ் நாராயணுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அதேநேரம், ரமேஷ் நாராயணன் ‘என்னு நிண்டே மொய்தீன்’ உள்ளிட்ட பல நல்ல படங்களுக்கு இசையமைத்தவர். இசை பங்களிப்புக்காக 4 முறை கேரள அரசு விருதை வென்ற முக்கியமான இசையமைப்பாளர். அவரை, விருது மேடைக்கு அழைத்து விருது கொடுக்காமல் கீழே வைத்து ஆசிஃப் கைகளில் கொடுக்க வைத்திருக்கிறார்கள். அதிலும், விருது அறிவிப்பவர் சந்தோஷ் நாராயண் என்கிறார். இதனால், அவருக்கு இருக்கும் வருத்தம் நியாயமானதுதானே? என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், ரமேஷ் நாராயண் அப்படி காயப்பட்டிருந்தால், அதை இன்னொருவர் அடையக் கூடாது என்பதற்காக ஆசிஃப் அலியிடமிருந்து விருதை வாங்கியிருக்க வேண்டும். மாறாக, யார் மீதோ உள்ள கோவத்தை ஆசிஃபிடம் காட்டி அவரை அவமதித்தது எந்த விதத்திலும் சரியில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ‘என்னை மேடைக்கு அழைக்காதது வருத்தத்தைக் கொடுத்தது. அதனால், ஜெயராஜிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டேன். யாரையும் அவமதிக்கும் நோக்கில் நான் நடந்துகொள்ளவில்லை’ என்றதுடன் ஆசிஃபிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார் ரமேஷ் நாராயண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments