துர்காவிற்கு கிடைத்த அங்கீகாரம், அன்பு,... : ராயன் வெற்றிக்கு துஷாரா நெகிழ்ச்சி!
ராயன் படத்தின் வெற்றிக்கு துஷாரா விஜயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். பின்னர் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன், அநீதி படங்களில் நடித்திருக்கிறார்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் துஷாரா விஜயன் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான ராயன் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால் துஷாரா கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றன.
முதல் மூன்று நாள்களில் உலகளவில் ராயன் திரைப்படம் ரூ.75.2 கோடியை வசூலித்துள்ளதாக தனுஷ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகை துஷாரா விஜயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் அவர்கள் இயக்கிய 'ராயன்' திரைப்படத்திற்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு பெரிய நன்றிகள். என் உழைப்பிற்கு கிடைத்த தங்களின் அன்பும், அரவணைக்கும் வார்த்தைகளும் என் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும்.
படத்துவக்கம் முதல் தற்போது மாபெரும் வெற்றிப்படமாக 'ராயன்' உருமாறியிருக்கும் வரையிலான பயணம் மிகப்பெரியது. வெகுசன மக்களிடம் என் கதாபாத்திரம் உள்பட ஏனைய கதாபாத்திரங்களையும் கொண்டு சேர்த்ததிலும் மாபெரும் வெற்றியை உறுதி செய்ததிலும் ஊடகத்தின் பங்கு முக்கியமானது. அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
எங்கள் இயக்குநர் தனுஷ் அவர்களுக்கும், சன் பிக்சர்ஸ் குழுமத்திற்கும் பெரிய, பெரிய நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
'துர்கா'விற்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும், வெற்றியும் மக்களால் சாத்தியமானது என்றால் அது மிகையில்லை. தொடர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உழைத்துக் கொண்டே இருப்பேன். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கருத்தில்கொண்டு என் பயணத்தை செழுமைப்படுத்துவேன்.
அன்புடன்,துஷாரா விஜயன் என்றார்.
நடிகர் விக்ரமுடன் வீர தீரன் சூரன் படத்தில் நடித்து வருகிறார்.