சில்லுனு ஒரு காதல் - 2! கதாநாயகன் இவரா?
சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் ஒபேலி கிருஷ்ணா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா, ஜோதிகா, வேதிகா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். ஒபேலி என். கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படம் பிளாக்பஸ்டர் படமானது.
இன்றுவரை சூர்யாவின் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன் சூர்யாவுக்கு அதிக ரசிகைகளைப் பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்கிற புகழையும் கொண்டுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்ற, ‘முன்பே வா என் அன்பே வா..’ பாடல் இன்றைய 2கே கிட்ஸ்களின் காதலுக்கும், காதல் தோல்விக்குமாக தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
இப்படத்திற்குப் பின், ஒபேலி என். கிருஷ்ணா நெடுஞ்சாலை, பத்து தல திரைப்படங்களை இயக்கினார். இரண்டும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படங்களாக அமைந்தன.
இந்த நிலையில், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒபேலி என். கிருஷ்ணா புதிய படத்தை இயக்குகிறார். இது, சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படுகிறது. நாயகனாக நடிக்க நடிகர் கவினிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்!
நடிகர் கவின் நடிப்பில் இறுதியாக வெளியான ஸ்டார் திரைப்படம் ரூ.25 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.