முதல் சம்பளம் ரூ.1 கோடியை தானம் கொடுத்த மகேஷ் பாபு மகள்!
நடிகர் மகேஷ் பாபுவின் மகள் செய்த செயல் கவனம் ஈர்த்துள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. தமிழில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தைப்போல மகேஷ் பாபுவின் திரைப்படங்கள் வெளியாகும்போதும் குடும்பத்துடன் ரசிகர்கள் செல்வார்கள்.
சில மாதங்களுக்கு முன் வெளியான ‘குண்டூர் காரம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றிப்படமானது. முக்கியமாக, அப்படத்தில் இடம்பெற்ற, 'குர்ச்சி மடதபெட்டி’ பாடல் இந்தியளவில் ஹிட் அடித்தது.
மகேஷ் பாபுவுக்கு மகனும், மகளும் உள்ளனர். அதில், மகன் கௌதம் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருவதுடன் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். மகள் சித்தாரா வெளிநாட்டில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், சித்தாராவுக்கு ஆடை விளம்பரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது. அதை ஏற்றுக்கொண்டு நடித்தவருக்கு சம்பளமாக ரூ.1 கோடியை வழங்கியுள்ளனர். ஆனால், அதை தன் சொந்த தேவைக்காக வைத்துக்கொள்ளாமல் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
12 வயதே ஆன மகேஷ் பாபு மகளின் இச்செயலை அறிந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.