நடிகையுடன் உறவு? நடிகர் மீது மனைவி புகார்!
நடிகையுடன் யுவராஜ்குமார் ஒன்றாக இருந்ததை பார்த்ததால் அடித்து வெளியே தள்ளியதாக குற்றச்சாட்டு.
பிரபல கன்னட நடிகர் யுவராஜ்குமாருக்கு நடிகையுடன் தகாத உறவு இருப்பதாக அவரது மனைவி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் பேரனான யுவராஜ்குமார், யுவா என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். முன்னதாக குழந்தை கதாபாத்திரத்தில் கன்னட படங்களில் நடித்துள்ளார்.
இவரும் மைசூரைச் சேர்ந்த ஸ்ரீதேவி பைரப்பா என்பவரும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2019 இல் திருமணம் செய்து கொண்டனர்.
Advertisement
Advertisement
திருமணத்துக்கு பிறகு ராஜ்குமார் குடும்பத்தினரால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் பயிற்சி மையமான ராஜ்குமார் அகடமியை ஸ்ரீதேவி கவனித்து வந்தார்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி நடிகர் யுவராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ராஜ்குமார் அகடமியின் கணக்கில் இருந்து அவரது தனிப்பட்ட கணக்குக்கு ரூ. 3 கோடியை முறைகேடாக மாற்றியுள்ளதாகவும், அகடமியின் நிதியை முறைகேடாக பயன்படுத்தி 20-க்கும் மேற்பட்ட சொத்துகள் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது குடும்பத்தினரை அவமரியாதையாக நடத்துவதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி தரப்பில் இருந்து யுவராஜ்குமாருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், யுவராஜ்குமாருக்கும் சக நடிகை ஒருவருக்கும் தகாத உறவு இருப்பதாகவும், விடுதி அறையில் இருவரும் ஒன்றாக இருந்ததை தான் பார்த்ததால் அடித்து வெளியே தள்ளினார் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இவ்வழக்கின் விசாரணை ஜூலை 4-ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீதேவின் குற்றச்சாட்டு கன்னட திரையுலகில் புயலைக் கிளப்பியுள்ளது.