‘இது என்றென்றும் என் இதயத்தை துளைக்கும்...’: ஜானி மாஸ்டர்
சிறையிலிருந்து வீடு திரும்பினார் ஜானி மாஸ்டர்...
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்த ஜானி மாஸ்டர் பிணையில் வீடு திரும்பியுள்ளார்.
நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் கடந்த 4 வருடங்களாக பெண் உதவி நடன இயக்குநரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார். முதலில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனக்கூறிய ஜானி மாஸ்டர் பின் குற்றத்தை ஒப்புக்கொண்டது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியது.
அந்தப் பெண் மைனராக இருக்கும்போதிருந்தே அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஜானி மாஸ்டர் மீது ஐபிசி (இந்திய குற்றவியல் சட்டம்) 376, 506 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சாரளப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பிணை கேட்டு அவர் அளித்த மனு தள்ளுபடியானது. இதனால், 30 நாள்களுக்கும் மேலாக சிறையிலிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ரங்கா ரெட்டி நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சிறையிலிருந்து வெளியே வந்த ஜானி மாஸ்டர் தன் வீட்டிற்கு சென்று தன் குழந்தைகளைக் கொஞ்சும் விடியோவை வெளியிட்டு, “இந்த 37 நாள்களில் எங்களிடமிருந்து நிறைய பறிக்கப்பட்டது. என் குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகளின் பிராத்தனையால் இன்று இங்கிருக்கிறேன். உண்மை பல நேரங்களில் மறைந்தாலும் அழியாது. ஒருநாள் வெல்லும். என் குடும்பத்தினர் கடந்து வந்த இந்த காலகட்டம் என்றென்றும் என் இதயத்தை துளைக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.