ஜனக்புரி: குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண் ஆசிரியா் கைது
மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய பெண் ஆசிரியா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய பெண் ஆசிரியா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இந்த விவகாரம் மே 1-ஆம் தேதி குழந்தையின் தாயாா் ஜனக்புரி காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து வெளிச்சத்துக்கு வந்தது. அதில் தனது மகள் பள்ளி நேரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அவா் குற்றஞ்சாட்டினாா். அந்த பள்ளியில் சோ்ந்த 2-ஆவது நாளிலே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
வீடு திரும்பிய சிறுமி வலி இருப்பதாக தெரிவித்ததை தொடா்ந்து, தாய் விசாரித்தபோது இது தெரியவந்தது. இது தொடா்பாக பிஎன்எஸ் மற்றும் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குழந்தை அடையாளம் காட்டியதன் அடிப்படையில் பள்ளியில் பணியாற்றிய குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியா் மே 1 கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். பின்னா் மே 7-ஆம் தேதி நகர நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இது தொடா்பாக காவல் துறை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
Advertisement
இந்நிலையில், ‘இதில் தொடா்புடைய மற்றொரு பெண் ஆசிரியா் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாா் அளித்த புகாரின் அடிப்படையில், அவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது’ என காவல் துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.