இன்ஸ்டாகிராமில் கானா பாடல்களின் வரிகளை ரீல்ஸ் போட்டு வன்முறையில் ஈடுபடும் போக்கு அதிகரித்துள்ளது.
திருத்தணியில் வடமாநில இளைஞரை ஆயுதங்களால் வெட்டிய கும்பல் கைதானாலும் சமூகத்தில் பெரிய விவாதத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
எங்கிருந்தோ பிழைப்பதற்காக இங்கு வந்த இளைஞர் ஒருவர் போதை கும்பலால் கடுமையாக வெட்டப்பட்டது பலருக்கும் கொந்தளிப்பைக் கொடுத்திருக்கிறது.
இளவயதிலேயே கூர் ஆயுதங்களைக் கொண்டு பட்டப்பகலில் இந்தக் கொடூரங்களைச் செய்வதற்கான நோக்கங்களில் பெரும்பாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் மோகமும் காரணமாகவே தெரிகிறது.
பட்டா கத்தி, அருவாள்களைச் சிலம்பம் சுற்றுவது போல் சுற்றிக்காட்டி இன்ஸ்டாவில் ரீல்ஸ்களை போடும் போக்கும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ரீல்ஸ்களில் இடம்பெறும் பாடல்களில் பெரும்பாலும் வன்முறை வரிகள் கொண்ட கானா பாடல்களாக இருப்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
சென்னையின் அடையாளமாக இருக்கும் கானா பாடல்களின் மூலம் பல நல்ல கலைஞர்கள் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர்களால் அந்த இசையையும் பாடல் தொனியையும் சினிமா மூலம் தனித்துவமான அடையாளங்களையும் பெற்றுள்ளன.
ஆனால், கஞ்சா போதை, பட்டாகத்தி பயன்பாடுகளை ஊக்குவிக்கும் விதமான கானா பாடல்களும் அண்மை காலமாக அதிகரித்திருப்பது அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் அதே வடமாநில இளைஞர் முன், குறிப்பிட்ட கானா பாடல் ஒன்றின் வரிகளுக்கு கத்தியைச் சுழற்றி மரண பயத்தைக் காட்டினர்.
இவர்கள் மட்டுமல்லாது அப்படி நிறைய இளைஞர்கள், பள்ளிச் சிறுவர்கள் அடிதடியை ஊக்குவிக்கும் கானா பாடல்களுக்கு இடமளிப்பதைப் பலரும் கண்டிப்பதுடன் இப்படியான பாடல்களைப் பாடுபவர்களை அடையாளம் கண்டு எச்சரிக்க வேண்டுமென்றும் காவல்துறைக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.