பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்: இளையராஜா
பவதாரிணி குறித்து இளையராஜா...
இசையமைப்பாளர் இளையராஜா தன் மகள் பவதாரிணி குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜன. 25 ஆம் தேதி இலங்கையில் காலமானார். மறைந்து ஓராண்டு கடந்த முதல் பிறந்த நாளும் திதியும் நேற்று (பிப்.12) என்பதால் அவரின் நினைவுகளைப் பகிரும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை இளையராஜா ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் பல இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள் கலந்துகொண்டனர். மேலும், பவதாரிணி இசையமைப்பில் உருவாகும் முதல் படமான ‘புயலிலே ஒரு தோணி’ படத்தின் இசைவெளியீடும் நடைபெற்றது.
Advertisement
இதையும் படிக்க: நீதிமன்றத்தில் ஆஜரான இளையராஜா!
பின், பவதாரிணி பாடிய பாடல்களை இளையராஜா குழுவினர் மேடையில் பாடினர். அவர்களுடன் கங்கை அமரன், இயக்குநர் வெங்கட் பிரபு, கார்த்திக் ராஜா மற்றும் இளையராஜா உள்ளிட்டோர் இணைந்து பாடினர்.
நிகழ்வில் பேசிய இளையராஜா, “என் மகளின் பிறந்த நாளும் திதியும் ஒரே நாளில் அமைந்துள்ளது. இது அபூர்வமானது. பெரும்பாலும் யாருக்கும் இப்படி அமைவதில்லை. இது அவருடைய ஆன்மா சாந்தியடைந்தையே குறிக்கிறது. பவதாரிணி இசையமைத்த புயலிலே ஒரு தோணி படத்தின் தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது. பவதாரிணியுடன் இறுதியாக கழித்த நாள்களை என்னால் மறக்க முடியாது” என உருக்கமாக பேசினார்.