உயிரே, உறவே, தமிழே... தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி கூறிய கமல்!
நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு நன்றி கூறியது குறித்து...
கன்னட மொழி விவகாரத்தில் தனக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி கூறியுள்ளார்.
‘தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது என்று கூறியதற்கு நடிகா் கமல்ஹாசனால் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது’ என்று கா்நாடக உயா்நீதிமன்றம் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கமல்,”நாங்கள் அனைவரும் ஒன்றே எனும் நோக்கத்தில் கூறியது. தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்க முடியாது. தவறு செய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்” எனக் கூறினார்.
Advertisement
இதனால், கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் படம் நாளை (ஜூன்.5) வெளியாக இருக்கும் நிலையில் கமல் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இந்தப் படம் குறித்து பேசியதாவது:
எனக்கு ஆதரவளிக்கும் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். நான் மேடையில் பேசிய ’தமிழே, உறவே, உயிரே’ என்ற சொற்றொடரின் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொள்கிறேன்.
தக் லைஃப் படத்தில் பலர் நடித்துள்ளார்கள். மணிரத்னம் என்ற பெயருக்காகவே குறைவான சம்பளத்தில் நடித்துள்ளார்கள். அவர்கள் திறமை குறித்து அடுத்த முறை தனியாக ஒரு முறை அழைத்து பேசும் வாய்ப்பு அமையும் என நினைக்கிறேன் என்றார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தில் சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி என முக்கியமான நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள்.
தமிழக அரசு இந்தப் படத்துக்கு நாளை (ஜூன்.5) ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.