மாரி செல்வராஜுக்காக 20 ஆண்டுகள்கூட காத்திருப்பேன்: துருவ்
பைசன் குறித்து துருவ் பேசியது...
நடிகர் துருவ் பைசன் திரைப்பட அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக். 17 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (அக்.12) சென்னையில் நடைபெற்றது.
இதில், இயக்குநர்கள் பா. இரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர், நடிகர்கள் துருவ், பசுபதி, லால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
நிகழ்வில் பேசிய நடிகர் துருவ், “பைசன் திரைப்படத்திற்காக எவ்வளவோ பேர் எனக்கு உதவியிருக்கிறார்கள். முக்கியமாக, கபடி ஆசிரியர் மணத்தி கணேசன், என் உடற்பயிற்சியாளர்கள், என்னுடன் கபடி விளையாடிய சகோதரர்கள் என இவர்களுடன் பயணித்தது மறக்க முடியாதது. நான் சரியாக படிக்காதது என் அம்மாவிற்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால், பைசனைப் பார்த்து பெருமையடைவார். என் சகோதரி, மச்சான், மருமகள் என என் குடும்பத்துக்கு நன்றி.
சீயானைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், பைசன் படப்பிடிப்பின்போது கஷ்டமான காட்சிகளில் அவரையே நினைத்துக்கொள்வேன். அவர் கொடுத்த உழைப்பை என்னால் வழங்க முடியும் என ஒவ்வொரு நாளும் வேலை செய்தேன். அவருக்கு மகனாக இருக்க என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. ஆனால், அதற்கு தகுதியானவன் எனப் பெயரெடுக்க ஆசைப்படுகிறேன், தயாராக இருக்கிறேன்.
இயக்குநர் மாரி செல்வராஜுக்காக 2, 3 ஆண்டுகள் அல்ல 10, 20 ஆண்டுகள்கூட காத்திருப்பேன். அவரிடம் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். பைசனில் நான் நடித்ததைவிட மாரி செல்வராஜ் நடித்திருந்தால் இன்னும் மிகப்பெரிய இடத்தை அடைத்திருக்கும். எனக்காக இல்லாமல் அவரின் உழைப்புக்காக, சினிமா மீதான அக்கறைக்காக இப்படம் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: என் உச்சபட்ச கர்வம் பைசன்: மாரி செல்வராஜ்