மகாபாரதத்தில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்!
பழம்பெரும் நடிகர் பங்கஜ் தீர் மறைவு பற்றி...
பி.ஆர். சோப்ரா இயக்கிய மகாபாரதத்தில் கர்ணனாக நடித்து புகழ்பெற்ற பங்கஜ் தீர் புதன்கிழமை காலை காலமானார். இவருக்கு வயது 68.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பங்கஜ், கடந்த சில மாதங்களாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இவரின் மறைவை உறுதி செய்துள்ள திரைத்துறை கலைஞர்கள் சங்கத்தினர், “எங்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளருமான பங்கஜ் தீர், அக். 15 காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் மும்பை வைல் பார்லே அருகே இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Advertisement
கர்ணனாக புகழ்பெற்றவர்
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 1988 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் நாடகத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றவர் பங்கஜ் தீர்.
சந்திரகாந்தா, பதோ பாஹு, ஜீ ஹாரர் ஷோ, கானூன் போன்ற தொலைக்காட்சித் தொடர்களும், சசுரல் சிமர் கா, சோல்ஜர், ஆண்டாஸ், பாட்ஷா மற்றும் தும்கோ நா பூல் பாயேங்கே போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
மும்பையில் அபின்னே ஆக்டிங் அகாதெமி நடத்தி வந்த பங்கஜ் தீர், அவரது சகோதரருடன் இணைந்து பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.
இவரது மகன் நிகிதின் தீரும் ஒரு நடிகர். சென்னை எக்ஸ்பிரஸ், ஜோதா அக்பர் மற்றும் சூரியவன்ஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.