அயோக்கிய அரசியல்வாதிகள்... ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையில் அமீர்!
ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் இயக்குநர் அமீர் கூறியதாவது...
ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் இயக்குநர் அமீர் ஒரு படத்தை தடைசெய்து ஒருவரை வழிக்குக் கொண்டுவரலாம் என நினைப்பவர்களை மிகவும் கேவலமானவர்கள் எனக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் நாளை (ஜன.9) வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜன நாயகன் பொங்கலை முன்னிட்டு ஜன.9ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருந்தது.
வெளிநாட்டில் மட்டுமே முன்பதிவில் சுமார் ரூ.60 கோடி வரைக்கும் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்த நிலையில், படத்திற்கான சான்றிதழ் அளிக்காததால் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நாளை (ஜன.9) காலை தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
முதலில் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஜன நாயகனுக்கு ஆதரவாகப் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி, கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டார்கள்.
இந்நிலையில், இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் ஆஃப்பில் இது குறித்து கூறியதாவது:
ஒரு திரைப்படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் தடுத்துவிட்டால் அவர்களை தன் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணம் எவ்வளவு கேவலமானது!
தமிழ்நாட்டில் அதிகாரத்தை யார் கையில் கொடுக்க வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்வார்கள். அயோக்கிய அரசியல்வாதிகள் அல்ல எனப் பதிவிட்டுள்ளார்.