மங்காத்தா 2 எப்போது? வெங்கட் பிரபு பதில்!
இயக்குநர் வெங்கட் பிரபு மங்காத்தா 2 படம் குறித்து பேசியிருப்பதாவது...
இயக்குநர் வெங்கட் பிரபு மங்காத்தா 2 திரைப்படம் எப்போது உருவாகும் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
வெங்கட் பிரபு அளித்த பதிலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் அஜித் குமார் நடித்த திரைப்படங்களிலேயே அவரது ரசிகர்களை அதிகம் கவர்ந்த திரைப்படமாக மங்காத்தா இருக்கிறது.
இந்தப் படம் இன்று (ஜன. 23) 400-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக மறுவெளியீடாகியுள்ளது.
இந்தப் படத்தில் அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, மகத், பிரேம்ஜி என பலர் நடித்துள்ளார்கள்.
தமிழகத்திலேயே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே 1 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தைப் பார்க்க இயக்குநர் வெங்கட் பிரபு சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றுக்கு வந்திருந்தார்.
ரசிகர்களுடன் படத்தைப் பார்த்த பிறகு அவர் மிகுந்த மகிழ்சியுடன் பேசினார். அங்குக் கூடியிருந்த அஜித் ரசிகர்கள் மங்காத்தா படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகுமெனக் கேள்வி எழுப்பினார்கள்.
அந்தக் கேள்விக்குப் பதிலளித்த வெங்கட் பிரபு, “நான் எப்படி சொல்வதென்று தெரியவில்லை. தல சொன்னால் எனக்கு ஓக்கே. மங்காத்தா முதல் பாகமும் அவர்தான் சொன்னார். அடுத்த பாகம் குறித்தும் அவர்தான் சொல்லுவார்” எனக் கூறினார்.
இதனைக் கேட்ட அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர். தற்போது, அஜித் ரேஸிங்கில் பங்கேற்பதால் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு தாமதமாகும் என்பது கவனிக்கத்தக்கது.