திரையரங்குகளில் சாமியாடினால்...! ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி...
கருப்பு திரைப்படம் பார்த்து சாமியாடுபவர்களைப் பற்றி இயக்குநர் ஆர்ஜே பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த கருப்பு திரைப்படம் மே 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் முதல் 3 நாள்களில் 147 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
நாட்டார் தெய்வமான கருப்புசாமி பற்றிய திரைப்படம் என்பதால் தமிழகம் முழுக்க பல திரையரங்குகளில் படம் பார்த்த மக்கள் சாமியாடும் விடியோக்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisement
கருப்பு படத்தை திரையரங்குகளுக்கு வந்து பார்த்த அனைவருக்கு நன்றி. நீங்கள் படத்தின் மீது காட்டிய அன்பு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானது.
தமிழ்நாடு முழுவதும் படம் பார்த்த மக்கள் பலரும் ஆர்பரித்தது, அழுதது மட்டுமின்றி பல இடங்களில் சினிமாவைத் தாண்டிய ஒன்றை அனுபவித்ததைப் போன்று உணர்ச்சிவசப்பட்டதாகவும் பல கதைகளை கேட்டு வருகின்றோம். சிலர் திரையரங்குகளில் சாமியாடியதையும் பார்த்தோம். எங்களைப் பொறுத்தவரை இப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் இது.
இந்த அன்புடன் சேர்த்து எனது சிறிய வேண்டுகோள். திரையரங்குகளில் உங்கள் இருக்கைக்கு அருகில் அமர்ந்துள்ளவர்கள் சாமியாடினால் அவர்களிடம் கருணையுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவுங்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ள திரையரங்கப் பணியாளர்களிடம் தகவல் கூறுங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் காட்டும் கருணை ஒரு புனிதச் செயலைப் போன்றது.
தமிழகம் முழுவதுமுள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், இதுபோன்ற தருணங்களுக்கு ஏற்றவாறு உங்கள் பணியாளர்களைத் தயாராக வைத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.