முகப்பு
செய்திகள்

பலர் வாழ்வாதாரத்தைச் சிதைத்த ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி! தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆதங்கம்!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பதிவு குறித்து....

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் செண்பகமூர்த்தி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
பகிர்:

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரெட் ஜெய்ண்ட் செண்பகமூர்த்தி குறித்து புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவர் சுரேஷ் காமாட்சி. இவர் தயாரிப்பில் வெளியான மாநாடு ரூ. 100 கோடி வரை வசூலித்தது. மேலும், ஜீவி - 2, வணங்கான் ஆகியவை கவனிக்கப்பட்டன.

சர்வதேச திரைவிழாக்களில் திரையிடப்பட்ட இயக்குநர் ராமின் ஏழுகடல் ஏழுமலை விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சுரேஷ் காமாட்சி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அதில், “அன்பிற்கினிய முதல்வர் அவர்களுக்கு... எம் மண்ணின் மைந்தனாக தாங்கள் முதல்வராக பதவியேற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ் சினிமாவைத் தனது கைக்குள் மட்டுமே வைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நடந்தேறியது. செண்பகமூர்த்தி போன்ற நபரால் பாதிக்கப்பட்டோர் பலர். அதில் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகியவர்களில் நானும் ஒருவன். மோனோபாலியை உருவாக்கியவர். ஐம்பதாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர்.

சினிமாவில் தாங்கள் மட்டுமே என போலி பிம்பத்தை உருவாக்கி வாழ்ந்துகொண்டிருப்பவர். முதல்வர் விஜய் வந்த பிறகாவது காலங்கள் மாறும்.. காட்சிகள் மாறும் என நினைத்தால்... இப்படியொரு புகைப்படம். பாதிப்படைந்தோரின் நிலையும் மனநிலையும் கொஞ்ச நஞ்சமல்ல. வார்த்தைகளால் விவரிக்க இயலாது. திரைத்துறை இவரைப் போன்றவர்களால் மட்டுமே இயங்குவதாய் பிம்பம் அமைத்து மற்றவர்களை இழப்பிற்குள்ளாக்குவார்கள். எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவதியுற்றிருக்கிறார்கள். அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவரது கட்சிக்காரரான நடிகர், இயக்குநர் போஸ் வெங்கட் தனது பேட்டியில் வெளிப்படையாக செண்பகமூர்த்தியின் மோனோபாலி பற்றி பேசியிருப்பார்.

மனதுவந்து கேட்டுக்கொள்கிறேன் இவர்களைப் போன்றவர்களை சரியாக பராமரிக்காமல் போனால் தமிழ் சினிமாவில் பலர் காணாமல் போய்விடுவார்கள். அது தவிர்க்க செண்பகமூர்த்தி போன்றவர்களை இந்த அரசு தவிர்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட ஒருவனாகப் பதிகிறேன். தமிழ் சினிமாவிற்கு ஒரு சுதந்திரக்காற்றை உயிர்மூச்சை தருவீர்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் என் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறேன். இது தொடர்கதையாகக் கூடாது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொணர்கிறேன். தாங்கள் தலைமையேற்றிருக்கும் அரசும், அமைச்சரவையும் இத்தகைய சிண்டிகேட் தொழில்முறைகளைத் தடுக்கும் என நம்புகிறேன். மாற்றங்கள் என்பதே நம்பிக்கைதான். நிகழட்டும். திரையுலகம் மீளட்டும்.” எனக் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளை, திரைப்பட விநியோகங்களைச் செண்பகமூர்த்தி கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Producer Suresh Kamatchi has released a new post regarding Red Giant's Shenbagamoorthy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.