முகப்பு
திரை விமரிசனம்

'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!

மை குறும்படம் யூ-டியூப் தளத்தில் காணக் கிடைத்தது. இந்தப் படத்தின் தொடக்கம் சிறுமியிடம் இருந்து தொடங்குகிறது.

Updated On : 20 செப்டம்பர், 2018 at 1:21 AM
பகிர்:

மை குறும்படம் யூ-டியூப் தளத்தில் காணக் கிடைத்தது. இந்தப் படத்தின் தொடக்கம் சிறுமியிடம் இருந்து தொடங்குகிறது.

சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஒரு பூங்காவில் விளையாடுகிறார்கள். அங்கே ஒரு சிறுமி விளையாட முடியாமல் ஏங்கித் தவிக்கிறாள். அந்த ஏக்கம் நிறைந்த கண்களிலிருந்து விரிகிறது படத்தின் தலைப்பு. பாரதியாரின் கண்களில் மை என்ற எழுத்தை வடிவமைத்தது கவனத்தை ஈர்த்ததுடன், படத்துடன் ஒன்றிணைய வைத்தது.

அடுத்த காட்சியில் இளைஞர் ஒருவர் பெண் பார்க்க வருகிறார். இளம்பெண்ணும், அந்த இளைஞரும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் பிடித்துப் போனது, அதனால் நேரில் பார்த்து பேசிவிட்டு போகலாம் என்று வந்தேன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

Advertisement

அதேநேரத்தில் ஒரு விளம்பரப் படம் நிறுவனம் காட்டப்படுகிறது. பல மாடல் அழகிகளை பார்த்து இதுபோன்ற மாடல்தான் இந்தப் பொருளின் விளம்பரத்துக்கு தேவை என்கிறார் ஒரு வர்த்தகர். இதையும், பெண் பார்க்கும் நிகழ்வையும் மறைமுகமாக இயக்குநர் கேலி செய்திருக்கிறார்.

அந்த இளைஞர் அந்தப் பெண்ணிடம் சில கேள்விகளைக் கேட்கிறார். அவர் எதிர்பார்ப்புகளையும் சொல்கிறார்.

இருவரின் உரையாடல்களுக்கும் தொடர்புடைய வகையில் திருமணமான பெண்கள் எப்படி வாழ்கிறார்கள், கல்லூரி பெண் எதிர்கொள்ளும் சவால்கள் என சில விஷயங்களை காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் நற்றமிழன் விக்னேஷ்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் கேட்கும் கேள்வியால் அதிர்ச்சி அடையும் அந்தப் பெண் என்ன செய்கிறாள் என்பதே படத்தின் முடிவு.

படம் முடிந்தவுடன் இயக்குநரின் கவிதை பின்குரலில் ஒலிக்கப்படுகிறது. நிமிர்வாய் தோழி…! அடக்கம் வேறு.. அடங்குதல் வேறு..! என்ற அந்தக் கவிதை அற்புதம்.  வசனங்களும் சிறப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடத்திருக்கிறார்கள்.

பெண்மையைப் போற்றும் இந்தப் படத்தில் பெண் கலைஞர்களும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மரியா செல்வி. சிறப்பான காட்சிகளை கேமரா கண்கள் வாயிலாக பதிவு செய்திருக்கிறார்.

பின்னணி இசையும் அருமை. இசைக் கலைஞரும் பெண்தான்.

துபையில் இந்தப் படத்தை உருவாக்கிய நற்றமிழனை தொடர்பு கொண்டு பேசினேன்.

“பிஎஸ்சி விஸ்காம் படித்து முடித்துவிட்டு துபையில் பணிபுரிந்து வருகிறேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது என் கனவு. எனது பூர்விகம் திருநெல்வேலி. யாழ் இனிது குழல் இனிது உள்பட இதுவரை 3 குறும்படங்களை இயக்கி இருக்கிறேன். மை படத்தில் இசை, கேமரா ஆகியவற்றுக்கு பெண் கலைஞர்களையே பயன்படுத்தினேன். சிறுமி முதல் திருமணமான பெண்கள் வரை எதிர்கொள்ளும் சில பிரச்னைகளை படத்தில் அலச நினைத்தேன். மையின் நிறம் கறுப்பு. பெண்களின் வலியை அதாவது, இருண்ட பக்கங்களை இந்தப் படத்தின் கதையில் சொல்லாம் என்று முடிவு செய்ததால் மை என்று பெயர் சூட்டினேன். இந்தப் படத்தை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் பலர் பாராட்டினர். அடுத்த குறும்படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்று கூறிய நற்றமிழனுக்கு மேலும் பல நல்ல படங்களை இயக்க வேண்டும் என்று வாழ்த்தினேன். இந்த படத்தின் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

யூ-டியூப் தளத்தில்  https://www.youtube.com/watch?v=eGxEBj7nXvI என்ற லிங்கில் படம் காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.