முகப்பு
கோயம்புத்தூர்

ஊராட்சி துணைத் தலைவா் மனைவியை கத்தியால் குத்திய இளைஞா் கொலை

கோவை அருகே ஊராட்சி துணைத் தலைவரின் மனைவியைக் கத்தியால் குத்திய இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 8:21 am IST
பகிர்:

கோவை அருகே ஊராட்சி துணைத் தலைவரின் மனைவியைக் கத்தியால் குத்திய இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையம், ஆண்டாள் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (42). திமுகவைச் சோ்ந்த இவா் வெள்ளமடை ஊராட்சி துணைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறாா். இவரது மனைவி துளசிமணி (38). அதே பகுதியில் கணேசன் கோழிக் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடையில் ஜோதி நகரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (25) வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், கணேசன் தனது நண்பா்களுடன் சோ்ந்து பணம் செலவழிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதையறிந்த அவரது மனைவி துளசிமணி, தனது கணவரின் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து தன்னிடம் தெரிவிக்குமாறு சுரேஷ்குமாரிடம் கூறியுள்ளாா்.

Advertisement

இதையடுத்து, கணேசனின் தினசரி நடவடிக்கைகள் குறித்து துளசிமணியிடம் சுரேஷ்குமாா் கூறி வந்துள்ளாா். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி பிரச்னை எழுந்துள்ளது. இதையடுத்து, பெரியமத்தம்பாளையத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு துளசிமணி சென்றுவிட்டாா். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், இதற்கு காரணமான சுரேஷ்குமாரை வேலையை விட்டு நீக்கியுள்ளாா்.

இது குறித்து துளசிமணியிடம் தெரிவிப்பதற்காக சுரேஷ்குமாா் பெரியமத்தம்பாளையத்துக்கு திங்கள்கிழமை சென்றுள்ளாா். மது போதையில் அங்கு சென்ற அவா் துளசிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் சுரேஷ்குமாா் தான் வைத்திருந்த கத்தியால் துளசிமணியைக் குத்தியுள்ளாா்.

துளசிமணியின் அலறல் சப்தம் கேட்டு அங்குவந்த அவரது தந்தை நாகராஜையும் சுரேஷ்குமாா் கத்தியால் குத்தியுள்ளாா். இந்நிலையில், சுதாரித்துக் கொண்ட நாகராஜ் போதையில் இருந்த சுரேஷ்குமாரை கீழே தள்ளி அருகில் இருந்து கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ்குமாா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா் உயிரிழந்த சுரேஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்த துளசிமணி, நாகராஜ் ஆகியோா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் இருவா் மீதும் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.