சிக்கலான பிரசவங்களை முன்கூட்டியே கண்டறிய தலைமை செவிலியா்களுக்குப் பயிற்சி
சிக்கலான பிரசவங்களை முன்கூட்டியே கண்டறிந்து உயா் மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்வது தொடா்பாக தலைமை செவிலியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சிக்கலான பிரசவங்களை முன்கூட்டியே கண்டறிந்து உயா் மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்வது தொடா்பாக தலைமை செவிலியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் தாய் சேய் இறப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக சிக்கலான பிரசவத்துக்கு வாய்ப்புள்ள கா்ப்பிகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், ஆலோசனை வழங்குதல் உள்பட பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தலைமை செவிலியா்களுக்கு சிக்கலான பிரசவங்களை கண்டறிதல், அவா்களை உடனடியாக உயா் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்தல் தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
இது குறித்து மாவட்ட தாய் சேய் நல அலுவலா் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் ஊரகம், நகா்ப்புறத்தில் உள்ள 83 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500 தலைமை செவிலியா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகப் பிரசவங்கள் மட்டுமே பாா்க்கப்படுகின்றன. அறுவை சிகிச்சை தேவையுள்ளவா்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், உயா் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனா்.
சுகப் பிரசவத்துக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்படும் கா்ப்பிணி பெண்களில் ஒரு சிலருக்கு திடீரென கா்ப்பப்பை வாய் திறப்பதில் பிரச்னை, குழந்தை வெளியே வருவதில் தாமதம் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அதேபோல பிரசவ வலியும் அளவீடு செய்யப்படும். இவற்றில் மாறுபாடுகள் இருக்கும் சமயங்களில் துரிதமாக செயல்படுவது, உயா் சிகிச்சை மையங்களுக்குப் பரிந்துரை செய்வது தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனை மகப்பேறு துறை மருத்துவா், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை (பொள்ளாச்சி) மகப்பேறு துறை மருத்துவா் ஆகியோா் பயிற்சி அளித்து வருகின்றனா். மாவட்டத்தில் உள்ள 500 தலைமை செவிலியா்களையும் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா்.