முகப்பு
கட்டுரைகள்

பெட்ரோல் விலை உயர்வும் அரசின் கற்பிதங்களும்

சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த உடனேயே பெட்ரோல் விலையை உயர்த்தும் பணியை மத்திய அரசு செவ்வனே தொடங்கிவிட்டது. தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே பெட்ரோல் விலை ரூ.5 உயர்த்தப்பட்டது. ஆனால், இந்த உயர்வு எங்கள

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:15 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:26 PM

சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த உடனேயே பெட்ரோல் விலையை உயர்த்தும் பணியை மத்திய அரசு செவ்வனே தொடங்கிவிட்டது. தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே பெட்ரோல் விலை ரூ.5 உயர்த்தப்பட்டது. ஆனால், இந்த உயர்வு எங்களுக்குப் போதாது என்று எண்ணெய் நிறுவனங்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றன.

 இதற்கு மனமிரங்கி அரசு இன்னொருமுறை பெட்ரோல் விலையை உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த உயர்வுகளெல்லாம் தேர்தலுக்கு முன்பே வந்திருக்க வேண்டியவைதான். ஆனால், அரசின் முயற்சியால் ஒத்திப்போடப்பட்டு வந்தன.

 கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே பெட்ரோல் விலையைச் சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயிக்கும் உரிமையை பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிவிட்டது. பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதில் இருந்து அரசு ஒதுங்கிக் கொண்டுவிட்டதால், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் இஷ்டப்படி விலையை உயர்த்துகின்றன. ஆனாலும் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை அரசே இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறது.

Advertisement

 பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களின் கையில் இருக்கும்போது, விலையேற்றத்தைத் தள்ளிப்போடும் அதிகாரம் மட்டும் அரசுக்கு எப்படி வந்தது என்று அப்பாவி பொதுஜனங்கள் கேட்கலாம். வெளிப்படையாக ஒன்று, மறைமுகமாக ஒன்று இருப்பதெல்லாம் அரசியலில் சாதாரணம். இதுவும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

 ஒன்றுமட்டும் தெரிகிறது. பெட்ரோலிய நிறுவனங்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டோம் இனி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அரசு கூறுவதெல்லாம் பொய். விலையேற்றத்தைத் தள்ளிப்போட முடிந்த அரசால், விலையையும் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் உண்மை.

 அரசு நினைத்தால் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறக்கூட முடியும். ஆனால், பொருளாதாரச் சீர்திருத்தத்தையும், வளர்ச்சியையும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைக் கொண்ட இந்த அரசிடமிருந்து இதை எதிர்பார்க்க முடியாது.

 இவர்கள் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று கூறுகிறார்கள். அதற்கான காரணங்களையும் அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காரணங்கள் எல்லாம் நியாயமானவையல்ல. மக்களை ஏமாற்றும் தந்திரங்கள். இந்தத் தந்திரங்களைக் கொண்டுதான் அரசு அப்பாவி மக்கள் மீது விலையேற்றத்தைத் திணிக்கிறது.

 பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு அரசு கூறும் காரணங்கள் மூன்று. முதலாவது காரணம், கச்சா எண்ணெய் விலை. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் அதற்கேற்றபடி பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்று அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறுகின்றன.

 ஆனால், இதில் உண்மையில்லை. கச்சா எண்ணெயின் இப்போதைய விலை பீப்பாய்க்கு 94 அமெரிக்க டாலர்கள். கடந்த மாதத்திலிருந்து எடுத்துக்கொண்டால் சராசரியாக 100 டாலர்கள். ஒரு டாலரின் மாற்று மதிப்பு 44.9 ரூபாய். சராசரியாகக் கணக்கிட்டால் ஒரு பீப்பாயின் விலை ரூ.4,490. ஒரு பீப்பாய் என்பது 159.99 லிட்டர். ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் மதிப்பு ரூ.28.

 பெட்ரோல் உற்பத்தியில் கச்சா எண்ணெய் 90 சதவீதமும் உள்நாட்டில் தயாராகும் பொருள்கள் 10 சதவீதமும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஒட்டுமொத்தமாக உற்பத்திச் செலவு ஒரு லிட்டருக்கு 30 ரூபாயைத் தாண்டாது. இந்தக் கணக்கின்படி பார்த்தால் கடந்த 2006-07-ம் ஆண்டில் உற்பத்திச் செலவு ரூ.19.47 ஆகவும், 2007-08-ம் ஆண்டில் 24.71 ஆகவும், 2008-09-ம் ஆண்டில் ரூ.26.11 ஆகவும், 2009-10-ம் ஆண்டில் ரூ. 21.75 ஆகவும் இருந்திருக்கும். அரசின் தகவல்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. வரிவகையில் அரசு எந்த லாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்றால் பெட்ரோலை இதே விலைக்கே மக்களுக்குத் தந்திருக்க முடியும். அதனால் கச்சா எண்ணெயைக் காரணம் காட்டுவது போலியானது.

 பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு அரசு கூறும் இரண்டாவது காரணம், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படும் இழப்பு. கடந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.78 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 208 கோடி நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அரசு கூறுகிறது. இதன் அடிப்படையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு நியாயப்படுத்தப்படுகிறது.

 இந்த வாதமும் மோசடியானது. ஏனெனில், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவது நஷ்டமே அல்ல. அது அரசின் விலைக்கும், இறக்குமதி விலைக்கும் இடையிலான வேறுபாடு மட்டுமே. இதை ரங்கராஜன் கமிட்டி தெளிவாக்கியிருக்கிறது. உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில் இயங்குகின்றன என்பதை அந்தந்த நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

 கடந்த 2006 முதல் 2010 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் இந்த நிறுவனங்கள் ரூ.1,26,288 கோடி லாபம் ஈட்டியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 பெட்ரோலிய உயர்வுக்கு அரசு கூறும் மூன்றாவது காரணம், மானியங்களால் ஏற்படும் பொருளாதாரச் சுமை. சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றுக்கு அதிக அளவில் மானியங்கள் தரப்படுவதால் அவற்றை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல் மற்றும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த வேண்டியிருக்கிறது என்று அரசு கூறுகிறது.

 ஆனால், புள்ளிவிவரங்களின்படி 2006-07 முதல் 2009-10 வரையிலான நிதியாண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ.23,325 கோடி. இதே காலகட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய் ரூ.4,10,842 கோடி. இதன்படி அரசு வழங்கியிருக்கும் மானியம், லாபத்தில் வெறும் 5.67 சதவீதம்தான். மாநிலங்களின் வரி வருவாயான ரூ.2,63,766 கோடியையும் சேர்த்தால் இந்த அளவு வெறும் 3.45 சதவீதம்தான்.

 கிடைக்கும் லாபத்தில் சிறு துரும்பைத்தான் மானியம் என்கிற பெயரில் அரசு கிள்ளிப் போட்டிருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. மொத்தத்தில் பெட்ரோலியத் துறை லாபம் கொழிக்கும் துறை. பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்துவதன் நோக்கம் லாபத்தை அதிகரிப்பதேயன்றி, நஷ்டத்தைச் சமாளிப்பதல்ல.

 இதுதவிர டீசலில் லிட்டருக்கு ரூ.18.19, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெயில் லிட்டருக்கு ரூ. 29.69, சமையல் எரிவாயு சிலிண்டரில் ரூ.329.73 நஷ்டம் ஏற்படுவதாக அரசு கூறி வருகிறது. இப்படிப் பூதாகரமான நஷ்டக் கணக்கைக் காட்டுவதன் மூலம் மக்களின் எதிர்ப்பை அடக்கலாம் என்பது அரசின் திட்டம்.

 பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதற்கு அரசு போலியான காரணங்களைக் கூறிவருவதைப் பார்த்தால், சமையல் எரிவாயு, டீசல் போன்றவற்றின் விலையையும் கடுமையாக உயர்த்துவதே அதன் நோக்கமாக இருக்கும் என்று தெரிகிறது. இதுஒருபுறம் என்றால், முடிந்தால் எல்லா வகையான மானியங்களையும் ஒழித்துவிடவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

 வீட்டு உபயோக எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியத்தை இனிமேல் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கலாம் என்கிற திட்டம் அரசிடம் இருக்கிறது.

 இதனால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிக விலை கொடுத்து எரிவாயு சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் மானிய விலையில்கூட எரிவாயு சிலிண்டர்களை வாங்க முடியாத நிலையில் இருப்பவர்கள் என்பதால், ஒட்டுமொத்தமாகவே மானியம் என்பது இல்லாமல் போய்விடும்.

 இதுபோன்ற பெட்ரோலியப் பொருள்களில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற அரசின் கொள்கையால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பல்வேறு சீர்திருத்தங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

 இந்த நடவடிக்கைகளில் சில, பொருளாதார வளர்ச்சியுடன் சமரசம் செய்து கொள்பவையாகக் கூட இருக்கின்றன. ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.

 ரிசர்வ் வங்கியின் கொள்கைகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கலாம். ஆனாலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஒன்றே ரிசர்வ் வங்கிக் கொள்கைகளின் நோக்கம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், இதற்கு நேர் எதிராக அரசின் கொள்கைகள் இருக்கின்றன. பெட்ரோலியப் பொருள்களின் விலையை அவ்வப்போது உயர்த்துவதன் மூலமாக பணவீக்கம் உயர்வதற்கு அரசே காரணமாக இருக்கிறது. இதனால் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் எதுவும் உரிய பலனைத் தருவதில்லை.

 நாடு சுதந்திரமடைந்தபோது, நமது தலைவர்கள் பெட்ரோலியத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள். அதனால்தான் அந்தத் துறை அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற கொள்கையை வகுத்தார்கள்.

 இந்தத் துறையில் அரசின் பொறுப்புகளை வலியுறுத்தினார்கள். ஆனால், எதிலும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இப்போதைய அரசு, அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டது. கஜானாவில் பணத்தைக் கொட்டும் காமதேனுவாக மட்டுமே பெட்ரோலியத் துறையைப் பார்க்கிறது. அதன் விளைவுதான் பெட்ரோலிய பொருள்களின் அதிகப்படியான விலையேற்றமும் அதற்கு அரசு கூறும் பொருந்தாக் கற்பிதங்களும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.