பெட்ரோலியப் பொய்!
பத்தொன்பதாவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் டிஸ்ரேலி. இவர் அரசியல்வாதி மட்டுமல்ல; சிறந்த எழுத்தாளரும்கூட. "பொய்கள் மூன்று வகைப்படும். முதல் வகை சாதாரணப் பொய்; இரண்டாவது, வெறுப்
பத்தொன்பதாவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் டிஸ்ரேலி. இவர் அரசியல்வாதி மட்டுமல்ல; சிறந்த எழுத்தாளரும்கூட. "பொய்கள் மூன்று வகைப்படும். முதல் வகை சாதாரணப் பொய்; இரண்டாவது, வெறுப்பை உண்டாக்கக்கூடிய பொய். மூன்றாவது வகை புள்ளி விவரங்களுடன் கூறப்படும் பொய்' என்பது டிஸ்ரேலியின் அறிவுபூர்வமான பல கருத்துகளில் ஒன்று. அவர் மட்டும் இன்று உயிரோடிருந்தால் "பெட்ரோலியப் பொய்' என்று நான்காம் வகை இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்திருப்பார். பொய்களிலேயே இதுதான் அப்பட்டமான பொய்.
எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசு மற்றும் அதன் ஆதரவாளர்கள் பெட்ரோல் விலை உயர்வுக்குக் கூறும் காரணங்களைப் பார்த்தால் அவற்றில் நேர்மையில்லை; வஞ்சகமாக அவை நுகர்வோரை ஏமாற்றி வருகின்றன என்பது புரிய வரும். விலை உயர்வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சியினரும் விலை உயர்வை எதிர்த்த போதிலும், தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்கூட அதைக் குறைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஆகிய இரு தரப்பினரும் விலை உயர்வைக் குறைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மக்களைக் குழப்பி வருகின்றனர் என்பதுதான் உண்மை.
Advertisement
பெட்ரோலியப் பொருள்களுக்குக் கட்டுபடியாகக்கூடிய விலையை நிர்ணயிக்காததால் கடும் சிக்கலில் இருப்பது போல் எண்ணெய் நிறுவனங்கள் கூறிவருகின்றன. இன்னும் சொல்லப்போனால் ஏதோ நஷ்டத்தில் இயங்கி வருவதுபோல கவலை தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்குப் போதுமான பணம் இல்லை என்பது போல் பேசி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவது குறித்தும் அவை கவலை தெரிவித்துள்ளன.
டாலர் கணக்கில் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு உற்பத்திச் செலவு 33 பைசா அதிகரித்து வருவதாகவும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாகக் கொடுக்க வேண்டிய தொகை ரூபாய் கணக்கில் 77 பைசா அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் தலைவர் ஆர்.எஸ்.பூடோலா தெரிவித்துள்ளார்.
உண்மையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டிய சூழ்நிலை உள்ளது என்றும், சாதாரண மக்களின் நலன் கருதி விலை லிட்டருக்கு ரூ.7.50 என உயர்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் நிறுவனங்களின் நிலைமை உண்மையிலேயே மிகவும் மோசமாக இருக்கிறதா? அவை நஷ்டத்தில் இயங்கி வருகின்றனவா என்று பார்த்தால்; அது முழுக்க முழுக்கப் பொய் என்பது தெரியவரும். உண்மையில் அவை நல்ல லாபத்துடன்தான் செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் 2012 மார்ச் மாதத்துடன்கூடிய காலாண்டில் ரூ.12,670.43 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய ஆண்டில் கிடைத்த ரூ.3,905.16 கோடியைவிட 224 சதவிகிதம் அதிகமாகும். இதேபோல பாரத் பெட்ரோலியம் கார்ப்பொரேஷனின் லாபம் ஓராண்டுக்கு முன் ரூ.3962.83 கோடியாக இருந்தது இப்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் மூன்று பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களும் தொடர்ந்து கொழுத்த லாபத்தில் இயங்கி வருகின்றன என்பதுதான் உண்மை. இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த ஐந்தாண்டுகளில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.47,184 கோடி ஈட்டியுள்ளன.
இப்படி இருக்கும்போது அவர்களுக்கு நஷ்டம் எங்கிருந்து வந்தது? எண்ணெய் நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் குறைந்துவிட்டது என்பது எந்த வகையிலும் நஷ்டமாகாது. அதாவது, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலை நேரடியாக இறக்குமதி செய்வதில்லை. கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து (கற்பனையாக) விலை நிர்ணயம் செய்கின்றன. ஆனால், அரசு இன்ன விலைக்குத்தான் விற்கவேண்டும் என்று விலை நிர்ணயித்தால் இரண்டுக்கும் இடைப்பட்ட வருவாய்தான் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பாகும். இதை எப்படி நஷ்டம் எனக் கூறமுடியும்?
நாம் கச்சா எண்ணெய்த் தேவையில் 75 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறோம். ஒரு பேரல் (159.99 லிட்டர்) கச்சா எண்ணெய் விலை 110 டாலர் எனில், அதற்குத் தரப்படும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.54 எனில் லிட்டர் ரூ.36 விலையாகிறது.
அதாவது லாபநோக்கில்லாமல் செயல்பட்டால் பெட்ரோலியப் பொருள்களை இந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும். எனவே, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறுவது போலியானது மட்டுமல்ல; தவறானது.
இதேபோல பெட்ரோல் விலை உயர்வுக்கு ஆதாரமில்லாத வாதங்களை அரசு முன்வைக்கிறது. 2010 ஜூனில் விலைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு இதில் தலையிடமுடியாது என்கிறது மத்திய அரசு. நுகர்வோர் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அரசு அதைச் செய்யாமல் தட்டிக்கழிக்கிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்காததால் அவற்றுக்கு மானிய உதவி அளிக்க வேண்டியிருப்பதாக மத்திய அரசு அவ்வப்போது கூறிவருகிறது. ஆனால் உண்மை என்னவெனில், எண்ணெய்த் துறை நிறுவனங்கள் மூலம் வரி வருவாய், ராயல்டி, லாபம் முதலானவற்றைப் பெற்றுக்கொள்ளும் மத்திய அரசு, திருப்பித் தரும் தொகை மிகக்குறைவானது என்பதுதான் உண்மை.
பெட்ரோலியத்துறை மூலம் மத்திய, மாநில அரசுகள் வரி மற்றும் வரி அல்லாத வருவாயாக 2010-11-இல் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளன. அரசு பெட்ரோலியப் பொருள்களின் மீது அதிக வரி விதித்து, விலையை உயர்த்தி நுகர்வோரிடமிருந்து பணம் வசூல் செய் கிறது.
பின்னர் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை எண்ணெய் நிறுவனங்களுக்குத் திருப்பிக் கொடுக்கிறது.
பெட்ரோலியத்துறை மூலம் மாநில அரசுகளுக்கும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு முறை விலையேற்றத்தின் போதும் மாநில அரசின் வருவாய் அதிகரிக்கிறது.
ஏறக்குறைய 14 மாநிலங்கள் பெட்ரோல் மீது 25 சதவிகித விற்பனை வரி விதிக்கின்றன. ஆந்திர மாநிலம் அதிகபட்சமாக 33 சதவிகித வரி விதிக்கிறது. பெட்ரோல் மீது 22 சதவிகித வரி விதித்து வந்த கோவா மாநிலம், சமீபத்திய பட்ஜெட்டில் வாட் வரியை முற்றிலும் நீக்குவதாக அறிவித்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனக்குரல் எழுப்பி வந்தாலும் அந்த மாநிலத்தில் 25 சதவிகித விற்பனை வரி விதிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் குறைந்தபட்சமாக 15 சதவிகித வரி விதித்து வருகின்றன. கேரளம், தில்லி உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியைக் குறைத்துள்ளன. ஆந்திர மாநிலம் விற்பனை வரியை 3 சதவிகிதம் வரை குறைக்கக்கூடும் என்று தெரிகிறது.
ஒருபுறம் அரசு அவ்வப்போது பெட்ரோல் விலையை உயர்த்தி லாபம் சம்பாதித்து வருகிறது. மற்றொருபுறம் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருந்தால், பெட்ரோலியப் பொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கும் போக்கை அல்லவா எதிர்க்க வேண்டும்? அதாவது இது தொடர்பான கொள்கை வகுக்கப்படும்போதே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.
பெட்ரோல் விலை உயர்த்தப்படும்போது எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதும் பின்னர் அதை மறந்துவிடுவதும் அரசியல்கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதனால் எந்தப் பயனும் இல்லை. மத்திய அரசு மெல்ல மெல்ல கெரசின் மற்றும் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) ஆகியவற்றின் மீதான விலைக் கட்டுப்பாட்டையும் நீக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், மக்களுக்கு அளித்து வரும் சலுகைகளை மெல்ல மெல்ல தட்டிப்பறிப்பதற்கான உத்திகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.
இந்த நேரத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறிக்கொள்பவர்கள், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் விரோதக் கொள்கைகளை அரசு செயல்படுத்தாமல் தடுக்க ஜனநாயக இயக்கத்தை உருவாக்க வேண்டும். அதுதான் சிறந்த வழி.
எண்ணெய் நிறுவனங்களின் நிலைமை
உண்மையிலேயே மிகவும் மோசமாக இருக்கிறதா?
அவை நஷ்டத்தில் இயங்கி வருகின்றனவா என்று பார்த்தால்; அது முழுக்க முழுக்கப்ó பொய் என்பது தெரியவரும்.