கட்டுரைகள்

பாலைவனம் ஆகுமோ சோலைவனம்?

நிலவுலகம் தோன்றி மனித உயிர்கள் பரிணமித்தபோது அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தனர்.

உதயை மு. வீரையன்

நிலவுலகம் தோன்றி மனித உயிர்கள் பரிணமித்தபோது அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தனர். காடுகளும், மலைகளும், ஆறுகளும் அவர்களது வாழ்விடங்கள் ஆயின. காய்கனிகளும், கிழங்குகளும் உணவாயின. வெயிலும், மழையும் அவர்களுக்கு வேண்டிய வெப்பத்தையும், நீரையும் அளித்தன.

பூமியை அவர்கள் தாயாகவும், தெய்வமாகவும் வழிபட்டனர். மரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய அனைத்தையும் உற்ற உறவாக மதித்தனர். மழையை "மாரி'யம்மனாகவும், நெருப்பை "அக்கினி' பகவானாகவும், நீரை "கங்கா'தேவியாகவும் உருவகப்படுத்தினர். இந்த உறவுப்பாலம் இப்போது உடைந்துபோனது.

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவு நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வாரமாகப் பெருமழை பெய்து பெருகிய வெள்ளத்தால் ஏரிகளும், பனிப்பாறைகளும் உடைந்தன; சாலைகள் துண்டிக்கப்பட்டன; பாலங்கள் பெயர்ந்தன. ஏராளமான கிராமங்கள் தரைமட்டமாயின. இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியவில்லை.

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனிதத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பக்தர்கள் சிக்கியிருந்தனர். ராணுவம் மற்றும் துணைநிலை ராணுவப் படையைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள் 40 ஹெலிகாப்டர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மலைப் பள்ளத்தாக்குகள் நிறைந்த அப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினரைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாத நிலை. தன்னார்வக் குழுக்கள் விரும்பினாலும் சென்று உதவ முடியாத பகுதிகள். விமானப்படை வரலாற்றில் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மீட்புப்பணி இது என்று விமானப்படை அதிகாரியே கூறியுள்ளார்.

உத்தரகண்ட், இயற்கை ஆபத்து மிகுந்துள்ள மலைப்பிரதேசமாகும். இங்கே அடுக்கடுக்காக மலைகள் உள்ளன. இவற்றின் நடுவே அமைந்துள்ள பள்ளத்தாக்குகளில் பல சிறு ஆறுகள் ஓடுகின்றன. கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டதால் நிலச்சரிவும், நில அரிப்பும் அதிகரித்துள்ளன.

நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்தப் பேரிடருக்கு இயற்கையின் மேல் பழிபோட்டுப் பயனில்லை. இயற்கையை அழிக்கின்ற மனிதர்களின் பேராசையே காரணமாகும்.

நாட்டின் வடதிசையிலிருந்து தென்கோடி வரை சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அதிகாரப் போக்கு மாறவில்லை. மாறாக, அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காடுகளை அழிப்பது, மலைகளையே திருடுவது, ஆற்று மணலைக் கொள்ளையடிப்பது, விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கி விற்பது, ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பது என்னும் சுற்றுச்சூழலுக்கு எதிரான போக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதா? வளர்த்துக் கொண்டிருக்கிறார்களா?

அரசாங்கங்களும், தனியார்களும் போட்டி போட்டுக்கொண்டு இயற்கையை அழிக்கின்றனர். புதிய புதிய திட்டங்களின் பெயரால் அரசாங்கமே இயற்கைக் கனிவளங்களை உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தொழில்துறையினருக்குத் தாரைவார்க்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்ய முடியும்?

கேட்டால், இவையெல்லாம் மக்கள்நலத் திட்டங்களாம். நாட்டு மக்கள் பெயரால் தங்கள் வீட்டு மக்களுக்கான திட்டங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. "வீட்டு வளர்ச்சியா? நாட்டு வளர்ச்சியா?' என்று விவாதம் நடத்துகின்றனர். அடுத்த தலைமுறைக்குப் பழியையும், பாவத்தையும் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரி நீர் மற்றும் மழைநீர் இல்லாமல் வறட்சி மாவட்டங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு குறுவையும் இல்லாமல், சம்பாவும் இல்லாமல் சாகுபடி நிலங்களோடு சேர்ந்து அவர்களும் காய்ந்துபோய் கிடக்கின்றனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு இடிமேல் இடி விழுந்து கொண்டிருப்பதுபோல சோதனையும், சோகமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் "மீத்தேன் எரிவாயு' எடுக்கும் திட்டத்தினால் விவசாயம் முற்றிலும் அழிந்துபோகும் என்று விவசாயிகளும், குடிக்க நீரும் இல்லாமல் போகும் என்று பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 2010 ஜூலை 28 அன்று, "கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட்' என்ற நிறுவனத்திற்கு மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு உரிமம் வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகக் கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2011 ஜனவரி 4 அன்று தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்புடைய நிறுவனம் செய்து கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, வலங்கைமான், குடவாசல், நீடாமங்கலம் ஆகிய வட்டத்திற்கு உட்பட்ட 38 கிராமங்களிலும், நிறைவேற்றப்பட இருக்கிறது. அதுபோலவே, தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் வட்டங்களுக்கு உள்பட்ட 12 கிராமங்களிலும் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதாவது 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் - அதாவது 1 லட்சத்து 66 ஆயிரத்து 210 ஏக்கரில் - மீத்தேன் எரிவாயு எடுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

பூமிக்குள் 500 முதல் 1,650 அடி ஆழம் வரை நிலக்கரியில் படிந்துள்ள மீத்தேன் எரிவாயுவை அதற்கு மேல் உள்ள நீர் அழுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நீரை முழுமையாக வெளியேற்றினால்தான் மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி நீர் வெளியேற்றப்பட்டால் நீரோட்டங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்வளம் அற்றுப்போகும் ஆபத்துள்ளது. வெளியேற்றப்படும் நீரில் மீத்தேன் வாயுக்களின் தாக்கம் மற்றும் சோடியம்-பை-கார்பனேட், சல்பர் உள்ளிட்ட தனிமங்களும் அதிக அளவில் கலந்திருப்பதால் குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியாது. அத்துடன் வெளியேற்றப்படும் நீரை எங்கு, எப்படி கொண்டு போகப் போகிறார்கள் என்பதுபற்றித் திட்ட அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இவ்வளவு பெரும் பரப்பளவில் நீர் உறிஞ்சி வெளியேற்றப்படுவதால் இப்பகுதியே வறண்ட பாலைவனமாகிப் போகும். மூன்று போகம் விளைந்த பூமியில் விவசாயமே பூண்டற்றுப் போகும் என்ற கவலையிலும், அச்சத்திலும் மக்கள் உள்ளனர். இதை எதிர்த்து விவசாயிகள் கொந்தளிப்புடன் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்பிரச்னையில் நேரடியாகத் தலையிடக் கோரி தமிழ்நாடு விவசாயச் சங்கத்தினர் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.

தமிழக அரசு இத்திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தடைசெய்து நிறுத்தி வைக்க வேண்டும். மண்ணியல், நீரியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கொண்ட வல்லுநர் குழு அமைத்து இத்திட்டத்தால் ஏற்படக்கூடிய சாதக பாதக அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

இத்திட்ட ஆய்வறிக்கையின் மீது விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் கருத்தை அறிய பகிரங்கக் கூட்டங்கள் நடத்தி முடிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை இத்திட்டத்திற்கு அனுமதி தரவில்லை எனத் தெரிகிறது. இந்நிலை தொடர வேண்டும்.

எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படும் விவசாயிகளின் சம்மதம் இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. பல லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இயற்கை ஆபத்துகள் நிறைந்த மலைப்பிரதேசமான உத்தரகண்டில் இந்த ஆபத்துகளைத் தடுக்க வல்லுநர்கள் அளித்த பல அறிக்கைகளை அம்மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை. அத்துடன் அம்மாநிலத்தில் சுரங்க வேலைத் திட்டங்கள் மற்றும் அணைகளைக் கட்டி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நீர் மின்சாரத் திட்டங்கள் நிறைவேற்றுவதற்காக அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட பேரிடரால் அம்மாநில மக்கள் நிலைகுலைந்துள்ளனர்.

இதுபோலவே, காவிரி டெல்டா மாவட்டங்கள் உணவு உற்பத்திக்குப் பெயர் போனவை. "சோழநாடு சோறுடைத்து' என்று பலகாலமாக பெருமையோடு பேசப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நெற்களஞ்சியத்திற்கு ஏற்ற திட்டம் என்ன என்று யோசிக்க வேண்டாமா? மீத்தேன் எரிவாயு திட்டத்தை நடைமுறைப்படுத்தி விவசாயத்தையே அழிக்கத் திட்டமிடலாமா?

ஆண்டாண்டு காலமாக நாட்டின் உணவுப் பற்றாக்குறையைப் போக்கி வரும் பெருமை "காவிரி டெல்டா' எனப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களையே சாரும். அந்த மாவட்டங்களுக்கேற்ப திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். காவிரி நீர் கிடைப்பதற்கும், கடும் வறட்சியிலிருந்து மீட்பதற்கும் அரசு ஆவன செய்ய வேண்டும். "குதிரை குப்புறத் தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்த கதைபோல' வறட்சி மாவட்டங்களை வறண்ட பாலைவனமாக மாற்றிவிடக் கூடாது அல்லவா!

"ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தொழில் வளர்ச்சி வேண்டாமா?' என்று கேட்கின்றனர். வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றுதான் பாரதியும் பாடியுள்ளார். உழவும் வேண்டும்; தொழிலும் வேண்டும்; உழவை அழித்துவிட்டு தொழில் வேண்டும் என்று யாராவது கூறுவார்களா? தொடங்கப்படும் புதிய தொழில்கள் மக்களுக்கு வாழ்வைத் தர வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் தொழில் நாட்டுக்குத் தேவைதானா? அதுவும், "சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழில் யாருடைய நலனைப் பாதுகாப்பதற்காக?' என்ற கேள்விக்கு விடை தெரிந்தாக வேண்டும்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றார் வள்ளுவனார். உழவர்களும், உழவுத் தொழிலும் அவர்களுக்காக அல்ல; நாட்டு முன்னேற்றத்திற்காக; நாட்டு மக்களின் நலனுக்காக. அவர்கள் வாழ்வும், தொழிலும் வளர்ச்சியடைய வேண்டாமா? பசித்த வயிற்றுக்கு உணவளிக்கும் அவர்கள் தொழிலை வாழ வைக்க வேண்டிய கடமை அரசுக்கு இல்லையா? பொய்யாமொழிப் புலவரின் வாக்கு பொய்யாகலாமா?

முதல் மனித நாகரிகம் என்று பேசப்படும் சுமேரிய நாகரிகம் இயற்கைச் சீற்றத்தால் அழிந்திருக்கும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை வேறு; சூழலியல் சீர்குலைவால்தான் அழிந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சுமேரிய நாகரிகம் மட்டுமன்றி, சிந்து சமவெளி நாகரிகம், கிரேக்க நாகரிகம், பீனிசிய நாகரிகம், ரோமன் நாகரிகம், மாயன் நாகரிகம் ஆகியவற்றின் அழிவுக்கும் சூழலியல் அம்சங்கள்தான் முக்கிய காரணம் என்பதை வரலாறு மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் விளக்குகின்றன. இப்போது மறுபடியும் சுற்றுச்சூழல் சீரழிவால் பூமிக்குப் பேராபத்து காத்திருக்கிறது என்பதை மனித இனம் மறந்துவிடக் கூடாது.

""உலகம் வெப்பமடைதல் காரணமாக இந்தியாவில் ஒருபுறம் கடுமையான வறட்சியும், மறுபுறம் பெரும் இயற்கைப் பேரழிவும் நிகழும்' என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ள வேண்டிய மனித இனம் செயற்கைப் பேரழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா போன்ற சோலைவனங்கள், பாலைவனங்கள் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்:

பணி நிறைவுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

அசத்தல்...

SCROLL FOR NEXT