வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...
ரிசர்வ் வங்கி அண்மையில் ஒரு முக்கியமான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. வங்கிகள் தங்களது
ரிசர்வ் வங்கி அண்மையில் ஒரு முக்கியமான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. வங்கிகள் தங்களது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் "தனிப்பட்ட அடையாள எண்' (யுனீக் கஸ்டமர் ஐடென்டிஃபிகேஷன் கோடு) குறிப்பிட்ட கால வரம்புக்குள் கொடுத்திட வேண்டும் என்பதே அது.
ஏற்கெனவே, இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) "ஆதார்' அட்டையை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கத் தொடங்கிவிட்டது. அந்த அட்டையில், இரண்டு செய்திகள் காணப்படுகின்றன. ஒன்று, "ஆதார்' நாடு முழுவதும் செல்லுபடியாகும். இரண்டு, வருங்காலத்தில் அரசு மற்றும் அரசு-சாரா சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள "ஆதார்' உதவிகரமாக இருக்கும்.
இந்நிலையில், வங்கிகள் மீண்டும் ஒரு பிரத்தியேக, தனிப்பட்ட அடையாள எண் வழங்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு ஒரு வருந்தத்தக்க பின்னணி இருக்கிறது.
""கோப்ரா போஸ்ட்'' என்கிற புலனாய்வு இணையதளம், தான் நடத்திய ரகசிய விசாரணை அடிப்படையில், பரபரப்பான செய்தியை, இரண்டு தவணைகளில் வெளியிட்டிருந்தது. முதல் தவணையில், மூன்று பிரபல தனியார் வங்கிகள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முறைகேடான முயற்சிக்குத் துணைபோயின என்பதுதான் அது.
அதிர வைக்கும் இச் செய்தி உண்மைதானா என்பதை அறிவதற்கு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, சம்பந்தப்பட்ட வங்கிகள் விசாரணையைத் தொடங்கின. ரிசர்வ் வங்கியும் தனது நேரடியான ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த விசாரணைகளின் முடிவுகள் வெளிவருவதற்குள் மேலும் ஒரு பூதம் கிளம்பியது.
மேற்கூறிய இணையதளம் தனது இரண்டாவது அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 23 அரசுடமை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நபர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இன்றி உதவ முன் வருகின்றன என்பதுதான் அந்த அறிக்கையின் சாரம்.
வங்கிகள் மட்டும் அல்லாமல், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. மற்றும் பல காப்பீட்டு நிறுவனங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றன என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கான முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக, நாட்டில் பல விதிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில், "வாடிக்கையாளர்களைப்பற்றி நன்கு அறிதல்' என்கிற விதிமுறை முக்கியமானது. இதன்படி, வங்கியில் பணம் டெபாசிட் செய்பவர்கள் அல்லது கணக்கு தொடங்குபவர்கள் தங்களுடைய உண்மையான அடையாளத்தையும், வசிக்கும் இடத்தின் முகவரியையும் உறுதி செய்யும் வகையில், உரிய சான்றிதழ்களைத் தாக்கல் செய்திட வேண்டும். "கேட்பு வரைவோலை' (டிமாண்டு டிராப்ட்) வாங்குவது உள்ளிட்ட ரூ. 50,000/-க்கு அதிகமான ரொக்கப் பணப் பரிமாற்றத்துக்கு, "பான்' அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
"கோப்ரா போஸ்ட்' புலனாய்வு இணையதளம் என்ன கூறுகிறது என்றால், அவர்களது செய்தியாளர்கள், பல்வேறு வங்கிகளுக்குச் சென்று, தாங்கள் செய்தியாளர்கள் என்று தெரிவிக்காமல், மாறாக, தாங்கள் பெரிய தொகைகளை டெபாசிட் செய்திட விரும்புவதாகச் சொல்லி, வங்கி அதிகாரிகளை அணுகினார்களாம்.
மேற்கூறிய விதிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமலேயே, பெரிய பெரிய தொகைகளை டெபாசிட்டாகப் பெற்றுக்கொள்ள வங்கிகள் தயாராக இருந்தன என்று குற்றம் சுமத்தி இருக்கின்றது.
அதுமட்டும் அல்லாமல், மேற்கூறிய விதிமுறைகளைத் தவிர்ப்பதற்கு என்ன வழி என்று தெரிவிக்கவும் வங்கி அதிகாரிகள் தயங்கவில்லை என்கிறது அந்தப் புலனாய்வு. உதாரணமாக, ரூ. 50,000/-க்கு அதிகமான டெபாசிட்டுக்கு "பான்' அட்டை தேவை என்பதால், ஒரே கிளையில், ஒருவரது பெயரில் பெரிய தொகையைப் போடாமல், அந்தப் பெரிய தொகையை ரூ. 49,000/-க்கு மிகாமல், பல்வேறு கிளைகளில் சிறிய, சிறிய டெபாசிட்டுகளாகப் பிரித்துப் போடலாம் என்கிற யோசனையையும் வழங்கினார்களாம்! "பல்வேறு பெயர்களில்' பணத்தைப் பிரித்துப் போடலாம் என்றும் சொன்னதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், பெரும் தொகைகளுக்கான "பாலிசி' வழங்குவதற்குத் தயாராக இருந்தன என்பது குற்றச்சாட்டு.
இச் செய்திகள் வெளிவந்தவுடன், வங்கிகளுக்கும், காப்பீட்டு நிறுவனங்களுக்கும், மத்திய அரசு, நிதி அமைச்சகத்திலிருந்து உத்தரவுகள் பிறந்தன. முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணி இடைநீக்கம், கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு, பணி மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தப் பின்னணியில்தான், மேற்கூறியபடி, வங்கிகள் தங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கிட வேண்டும் என்கிற புதிய ஆணையை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.
இதனால் என்ன நன்மை என்றால், ஒரே நபர் ஒரு வங்கியின் வெவ்வேறு கிளைகளில் பணத்தைப் பிரித்துப் பிரித்துப் போட்டு, விதிமுறைகளிலிருந்து தப்பிக்க முடியாது. அப்படிச் செய்ய முயன்றால், அதைக் கணினி வாயிலாக உடனே கண்டுபிடித்துவிடலாம்.
அதேபோல், அனைத்து வங்கிகளிலும் வழங்கப்பட உள்ள தனிப்பட்ட அடையாள எண்கள் பற்றிய தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும் என்பதால், விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், பெரிய அளவிலான பணப் பரிமாற்றம் சாத்தியம் இல்லை.
இந்த விதிமுறைகளின் உண்மையான முக்கியத்துவம் என்னவென்றால், இது வெறும் வரி ஏய்ப்புக்காக மட்டும் உதவும் கறுப்புப்பண விஷயம் அல்ல. இது நாட்டின் பாதுகாப்புக்கே உலை வைக்கக்கூடியதாகும். பயங்கரவாதச் செயல்களுக்கு தீனிபோடும் வகையில், வெளிநாடுகளிலிருந்து ""ஹவாலா'' மூலமாக வரக்கூடிய பணம், உள்நாட்டில் ஊடுருவல் செய்து, வங்கிகளுக்குள் நுழைந்து வெள்ளைப் பணமாகலாம்.
இது ஒருபுறம் இருக்க, தனியார் வங்கிகளிலும் சரி, அரசுடமை வங்கிகளிலும் சரி, டெபாசிட் பெருக்கத்துக்கான இலக்கு, லாப அதிகரிப்புக்கான இலக்கு ஆகியவை ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்படுகின்றன. எளிதில் எட்டிட முடியாத இலக்குகளை, எட்ட வேண்டிய நெருக்கடி வங்கி அதிகாரிகளுக்கு இருக்கிறது. இந்நிலையில் எப்படியாவது அதிக டெபாசிட் தொகையைத் திரட்ட வேண்டும் என்கிற உந்துதல் இவர்களுக்கு ஏற்படக்கூடும். இதன் காரணமாகவும் சிலர் தவறான பாதையில் செல்லத் துணிகிறார்களா? இது மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் நடப்பது சாத்தியமா என்பன போன்ற கோணங்களிலிருந்தும் ஆராயப்பட வேண்டும்.
அதே நேரம், கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் பணிபுரியும் வங்கித் துறையில், மிகச் சிலரே இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்று மனதைச் சமாதானம் செய்து கொள்ள முடியாது.
வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்கள் பெறுவது தொடர்பான விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய 3 தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முறையே 5 கோடி ரூபாய், 4.5 கோடி ரூபாய் மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதற்குமுன் ரிசர்வ் வங்கி இவ்வளவு பெரிய ரொக்க அபராதத்தை விதித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 36 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் கணக்குகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்தக் குறிப்பிட்ட குற்றத்தை வேண்டுமானால், புதிதாக அமல்படுத்தப்பட உள்ள விதிமுறைகளின் வாயிலாகத் தடுத்து நிறுத்தி விடலாம் என்பது வேறு விஷயம்.
ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வங்கிகள் மீது பொதுமக்கள் அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வேறு எந்த ஓர் அமைப்பின் மீதும் மக்கள் இந்த அளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்களா என்பது சந்தேகம்தான்! அப்படியிருக்கும்போது, அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக, வங்கியாளர்கள் செயல்பட வேண்டாமா? வங்கிகளின் மீதான நம்பிக்கை ஆட்டம் காண, வழி வகுக்கலாமா?
அவர்களே, ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது!
கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் துணை பொது மேலாளர்.