ஒரு ரயில் பயண உளைச்சல்கள்...
நாட்டில் தொலைதூரம் பயணம் மேற்கொள்வோர் ரயில் சேவையைத்தான் பெரிதும் பயன்படுத்துகின்றனர். அண்மையில் மைசூருக்கு
நாட்டில் தொலைதூரம் பயணம் மேற்கொள்வோர் ரயில் சேவையைத்தான் பெரிதும் பயன்படுத்துகின்றனர். அண்மையில் மைசூருக்கு சுற்றுலா செல்ல தூத்துக்குடியிலிருந்து மதுரை, சேலம் வழியாக மைசூர் செல்லும் "மைசூர் எக்ஸ்பிரஸ்' ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்தோம்.
வாஞ்சி மணியாச்சியிலிருந்து பயணிக்க வேண்டிய நாங்கள், சிறிது தாமதமானதால் நேரடியாக கோவில்பட்டிக்குச் சென்று அங்கிருந்து பயணத்தைத் தொடங்கினோம். சிறுவர், பெரியவர்கள் என 45 நபர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். மைசூருக்கு சுற்றுலா செல்கிறோம் என்ற ஆனந்தம் குடும்ப உறுப்பினர்களை ஆட்கொண்டிருந்தது. ஆனால், ரயில் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் எங்களைப் பெரிதும் பாதித்தது.
"எஸ் 3' பெட்டியில் நாங்கள் பயணம் செய்ய வேண்டிய இருக்கையில் வேறு இருவர் பயணம் செய்தனர். நாங்கள் மணியாச்சியில் ஏறவில்லை என்பதால், அதற்குள் அவர்களுக்கு நாங்கள் பயணிக்க வேண்டிய படுக்கையுடன் கூடிய பயணச்சீட்டுகளை டிக்கெட் பரிசோதகர் ஒதுக்கீடு செய்து கொடுத்திருந்தார்.
ரயில் பெட்டிகளில் இணைக்கப்பட்டிருந்த கழிவறைகளில் தண்ணீர் வசதி இல்லாமல் இருந்தது. கழிவறைகள் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம்... மூக்கைப் பிடித்துக்கொண்டு பயன்படுத்தும் நிலை.
கழிவறைகள் சுத்தம் இல்லாத காரணத்தால் கழிவறையை அடுத்துள்ள இருக்கைகளில் பயணம் செய்த நாங்கள் (பயணிகள்) கழிவறை துர்நாற்றத்தை நுகர வேண்டிய கட்டாயம். குழந்தைகள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளானர்கள்.
ரயில் நள்ளிரவில் பல ஊர்களில் நின்று செல்லும்போதெல்லாம் உடைமைகளைப் பாதுகாக்க தூக்கத்தைத் தவிர்த்து கண்காணித்தோம். காரணம், ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு இல்லாததுதான். 2 நாள்கள் சுற்றுலாவை முடித்துக்கொண்டு மைசூரிலிருந்து புறப்பட்ட மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடித்தோம். முன்பதிவு செய்த இருக்கைகளில், சாதாரண கட்டணத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிகளவில் ஆக்கிரமித்து அமர்ந்திருந்தனர். மைசூரில் இருந்து பெங்களூர்வரை அவர்கள் முன்பதிவு பெட்டிகளில்தான் பயணம் செய்தனர்.
உதாரணமாக 72 பேர் பயணிக்க வேண்டிய முன்பதிவு பெட்டியில் 400-க்கும் அதிகமானோர் பயணம் செய்ததால், முன்பதிவு செய்திருந்த நாங்கள் இருக்கைகளில் அமர முடியாமல் உடைமைகளுடன் கடும் பாதிப்புக்கு ஆளானோம். மைசூரிலிருந்து பெங்களூர் வரும் வரை 3 மணி நேரம், முன்பதிவு பயணிகளான நாங்கள் நடைபாதையில் நின்றவாறு பயணம் செய்ய நேரிட்டது. மொழிப் பிரச்னை காரணமாக அவர்களுடன் பரஸ்பரமாக பேசி உதவியும் கோர முடியாமல் திணறினோம். முன்பதிவு பெட்டிகள் அனைத்திலும் இதேநிலைதான்.
டிக்கெட் பரிசோதகர் வருவார், அவரிடம் எங்களின் மனக்குறையை தெரிவிக்கலாம் என எதிர்பார்த்ததுதான் மிச்சம். டிக்கெட் பரிசோதகர் வரவே இல்லை. பெங்களூரில்தான் டிக்கெட் பரிசோதகர் தலையைக் காட்டினார். மைசூரில் இருந்து பெங்களூர்வரை மேற்கொண்ட ரயில் பயணத்தை அவரிடம் தெரிவித்தோம். மைசூரில் இருந்து வர வேண்டிய டிக்கெட் பரிசோதகர் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வருவதில்லை. தினமும் இந்த நிலை தொடர்கிறது.
தூத்துக்குடியில் இருந்து மைசூர் சென்ற எக்ஸ்பிரஸ் கழிவறைகளில் குறைந்த அளவிலாவது தண்ணீர் கிடைத்தது. மைசூரில் இருந்து தூத்துக்குடி வந்த எக்ஸ்பிரஸில் சுத்தமாக தண்ணீரே இல்லை.
45 நிமிஷங்கள் தாமதமாக அடுத்த நிறுத்தத்தில் பயணத்தைத் தொடர்ந்த முன்பதிவு பயணிகளின் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றிக் கொடுத்த ரயில் நிர்வாகம், மைசூரில் இருந்து பெங்களூர் வரை மூன்றரை மணி நேரம் முன்பதிவு பெட்டிகளில் சாதாரணக் கட்டணத்தில் பயணம் செய்தவர்களை கண்டுகொள்ளவேயில்லை.
தொலைதூரப் பயணம் இனிமையாக அமைய வேண்டும் என ரயில் சேவையைப் பயன்படுத்துவோருக்கு மன உளைச்சல்தான் பரிசாகக் கிடைத்தது!