குடிக்க வேண்டாம் என்று அப்பாக்களை கேட்டு காலைப்பிடித்து மாணவர்களை கதறச் சொல்லி ஒரு பள்ளி அறிவுறுத்துவது பற்றி அறிந்தபோது அதிர்ந்து விட்டேன்.
பள்ளி மாணவர்களுக்கான கதை சொல்லி, அதனைக் கேட்டு சிறுவர் கதை எழுதும் போட்டியில் அப்பள்ளியின் நான்கு மாணவர்கள் பரிசு பெற்றிருந்ததையொட்டி பரிசளிக்க அப்பள்ளிக்குச் சென்றிருந்தேன் (சில தனிப்பட்ட காரணங்களால் அப்பள்ளியின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை).
ஆண்டுதோறும் கனவு அமைப்பு பள்ளி மாணவர்களுக்கு கதை எழுதும் போட்டியை நடத்திப் பரிசளித்து வருகிறது என்பது ஒரு செய்தி.
பரிசளிப்பு முடிந்த பின் அன்றைய நிகழ்ச்சியில் மது ஒழிப்பு பற்றி அந்தப் பள்ளி நிர்வாகி 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களிடம் பேசினார். இது மாதம் ஒருமுறை பேசுகிற விசயம்தான் என்றார்.
குடிக்கிற அப்பாக்களின் கால்களை காலையில் பிடித்து மாணவர்கள் அப்பாவை குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்துவது பற்றிச் சொன்னார். இரவு என்றால் குடிக்கும் அப்பாக்கள் தாமதமாக வருவர். காலையில் போதையில் தெரிந்து நிதானமாகியிருப்பர் என்றார்.
சனாதன பள்ளிகளின் நடைமுறையில் இருக்கும் - காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போது பெற்றோரின் கால்களில் விழுந்து நமஸ்கரிப்பதன் இன்னொரு பகுதியாகவும் இது இருக்கிறது.
நண்பர்களிடம் அப்பாக்கள் குடிப்பதைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
பக்கத்து வீட்டினரிடமும் சொல்லக் கூடாது. நாலு சுவர்களுக்குள் இருக்கும் விஷயமாக இருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்யும் போது அப்பாக்கள் மனதில் அந்தக்கூக்குரல் கேட்கும் என்கிறார்கள்.
குடிப்பதால் என்ன விளைவு ஏற்படும் என்பதை அவர் சொல்ல ஒரு சில மாணவர்கள் எழுந்து வந்து அதை நடித்துக் காட்டுகிறார்கள்.மூளையை, கல்லீரலை இதயத்தை, கணையத்தை, உடமபை பாதித்து, வார்த்தைகள் குழறி மயக்கம், வாந்தி வரைக்கும் நடித்தார்கள்.
பெரியவர்கள் கெட்டுத் திருந்தியிருக்கிறார்கள். அவர்களின் அம்மாக்கள் வந்து விபரம் சொல்லியிருக்கிறார்கள், அப்படி இல்லாத பட்சத்தில் குடிக்கும் எண்ணம் உள்ள மாணவர்கள் திருந்தவும் இது ஒரு வாய்ப்பாக அமைகிறது என்றார்கள். மாணவர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற இது பரவாயில்லை என்கிறார்கள்.
மேல் வகுப்புக் குழந்தைகளிடம் சொல்வதைவிட இங்கிருந்து ஆரம்பிக்கிறார். அவர்கள் எதிர்த்துப் பேசுகிறவர்களாக, பழக்கத்துக்கு அடிமையானவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தில் இந்த வகுப்புகளிலே ஆரம்பித்து விடுகிறது இப்பாடம். பாடம் தேவையானதாக உணர்கிறார்கள்.
அதிர்ச்சியாக இருந்தாலும் விளைவை பற்றிதான் யோசிக்க வேண்டும். மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகி இருப்பதை சமீபத்திய செய்திகள் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. அவர்களுக்கு வெகு சுலபமாக்க் கிடைத்து விடுகிறது என்பது தான் அபாயகரமானது.
இதில் மாணவிகள்கூட உள்ளாகியிருக்கிறார்கள் என்பதும் இன்னும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரக்கூடியது. பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை மதுபான சாலைக்குள் அனுமதி மறுக்கிற அறம் கட்டாயம் பின்பற்றப்பட்டால் நல்ல விளைவுகள் இருக்கும். அவர்களுக்கு கைக்கெட்டும் தூரத்தில் மது கிடைப்பது அபாயகரமானது.
எல்லா விழாக்களிலும் மது உபச்சாரம் என்பது சாதாரணமாகிவிட்டது. திரையரங்க வாசல்களுக்கு அப்படியே போய் விடும் பழக்கம் தொடர்ச்சியாக வந்து விடுகிறது.
குடி சாவைக் கொண்டுவருவதைக்கூட மாணவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் அது இறப்பிற்கெல்லாம் கொண்டு போகாது என்று உறுதியாக நம்புகிறர்கள்.
குடியால் அழிந்த மாணவர்களின் குடும்பங்களிலிருந்து அது ஒரு பரம்பரைத் தொற்று நோய் என்பதுபோல் எப்படியோ சிலர் வந்துவிடுகிறார்கள். சும்மா ஜாலிக்குக் குடிக்கிறேன்.
அதுவும் இப்பத்திக்குத்தான் என்பது போன்ற சமாதானங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. மாணவப் பருவத்திலிருந்து ஒருவனுக்கு இது ஆரம்பமாகிற போது வேலைக்குப் போனபின்பு அவனின் பொழுதுபோக்கிற்கு பத்திரிக்கை, புத்தக வாசிப்பு, விளையாட்டு, அரசியல் ஆர்வம் என்பதெல்லாம் இல்லாமல் போய் மதுவின் பிடிக்குள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறார்கள்.
வாகன விபத்துக்கள், பாலியல் ரீதியான தொந்தரவுகள் என்று வேறு ரூபங்களிலும் இவை தொடர்கின்றன. மரபணுவில் வந்தது, பரம்பரையாக ரத்தத்தில் வந்தது என்று வாதங்களும் அவர்கள் தரப்பிலிருந்து சமாதானங்களாய் வருகின்றன. பள்ளி முற்றங்களிலிருந்து, வீட்டிலிருந்து குடிபிசாசு கிளம்பினால் சரி. சனி விலகும்; ஞாயிறு பிறக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.