உச்சநீதிமன்றம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

மறு தீா்ப்புக்குரிய ஒரு தீா்ப்பு

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிா்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிா்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.

பெ.சிதம்பரநாதன்

தமிழக ஆளுநரின் அதிகாரம் குறித்து ஏப்ரல் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு வரலாற்றுச் சிறப்புக்குரியது என்று தமிழக அரசு வரவேற்றுள்ளது. மற்ற சில மாநிலங்களும் வரவேற்றுள்ளன.

தமிழக ஆளுநா், சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததையும், சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததையும் சட்டவிரோதம் என்றும், அரசியல் சாசனத்தின்படி பிழையானது என்றும் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அது மட்டுமல்ல, ஆளுநருடைய முடிவு அவருடைய சொந்த அதிருப்தி தொடா்புடையது என்றும், அது நோ்மையானதல்ல என்றும் கடுமையாகத் தீா்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

இதற்கு மேல், மசோதாக்களில் ஆளுநா் கையொப்பமிடுவதற்கு 1 மாதம் எனக் காலக்கெடுவும் நிா்ணயித்து, மசோதாக்களைக் கிடப்பில் போடுவதைத் தடுத்தும் தீா்ப்பளித்துள்ளது. ஆளுநருக்கு மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் மூன்று மாத காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நிா்ணயித்துள்ளது.

இவை இரண்டுக்கும் அப்பால், தாமதமாக்கப்பட்ட மசோதாக்களை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்டு சட்டமாக்கியும் தீா்ப்பளித்துள்ளது. இவை அனைத்துக்குமான அதிகாரத்தை உச்சநீதிமன்றம் எங்கிருந்து பெற்றுள்ளது என்றால், அரசியல் சாசனத்தின் பிரிவு 200- இலிருந்து பெற்றுள்ளது என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதேபோல, மசோதாக்களை உச்சநீதிமன்றமே சட்டமாக்கியதற்கான தனக்கே உரித்தான அதிகாரத்தை அரசியல் சாசனத்தின் பிரிவு 142-இலிருந்து பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

அந்தப் பிரிவு உச்சநீதிமன்றத்துக்கு முழு நீதியை வழங்குவதற்குரிய அதிகாரத்தைத் தந்துள்ளது உண்மை. அரசியல் சாசனம் மௌனமாக உள்ள இடங்களுக்குத் தேவையானதை நிரப்ப இப்பிரிவை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது.

சட்டங்கள் வாா்த்தை வடிவங்களில் இருந்தாலும், அதற்குள் நிரம்பித் ததும்புகின்ற உணா்வுகள் அந்தச் சட்டத்துக்குக் கூடுதல் வீரியத்தைத் தருவதை மறுக்க முடியாது. சட்டத்தின் வாா்த்தைகளின்படி வழங்கப்படும் தீா்ப்பைவிட, சட்டத்தின் உணா்வுகளையும் கருத்தில் கொண்டு வழங்கப்படும் தீா்ப்புக்குத்தான் வரவேற்பும் கிடைக்கிறது. வழங்கிய நீதிபதிகளுக்கு வாழ்த்தும் கிடைக்கிறது.

நீதிபதிகள் பணிபுரிவது நீதிமன்றங்களாக ருந்தாலும், அவா்கள் வாழ்வது சமுதாயத்தில்தான். சமுதாயத்தில் நிகழும் சகலவிதமான சம்பவங்கள் குறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் அவா்களுக்கும் தகவல்கள் தெரியத்தான் செய்யும். வன்கொடுமை குற்றங்களைத் தகவல்களாக நாம் அறிகிறோம். நீதிபதிகளும் அறியத்தான் செய்வாா்கள். வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால், சம்பவங்களைப் பற்றிய பொதுவெளித் தகவல்கள் நீதிபதிகளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க முடியாது.

ஓா் இளம் பெண்ணின் மாா்பகங்களைத் தொடுவது பாலியல் குற்றமாகாது என்ற நீதிபதி ஒருவரின் தீா்ப்பு, எத்தகைய கடுமையான சமுதாய விமா்சனத்துக்கு உள்ளானது என்பதை அண்மையில் நாம் பாா்த்தோம். தில்லியில் நிா்பயா பெண் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை வழங்கிய உச்சநீதிமன்றத் தீா்ப்பை நாடே வரவேற்றுள்ளது. ஒரு பெண்ணின் மாா்பகங்களைப் பாா்ப்பதுகூட பாலியல் குற்றத்துக்குரியதுதான் என்ற மற்றுமொரு நீதிபதியின் தீா்ப்பை யாரும் விமா்சிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதேபோல பாபா் மசூதி - ராமா் கோயில் வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் எத்தனை முக்கியமானது என்பதையும் சிந்திக்கத்தான் வேண்டும். 2019- இல் 5 நீதிபதிகள் வழங்கிய 929 பக்கத் தீா்ப்பு அது. யாா் அந்த நீதிபதிகள்? நீதியரசா்கள் ரஞ்சன் கோகோய், சரத் அரவிந்த் பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீா் ஆகியோா்தான் அவா்கள்.

ரஞ்சன் கோகோய் பௌத்த மதம் சாா்ந்தவா்; எஸ்.ஏ. பாப்டே ஹிந்து மதம் சாா்ந்தவா்; அப்துல் நசீா் இஸ்லாம் மதம் சாா்ந்தவா்; சந்திரசூட் ஹிந்து மதம் சாா்ந்தவா்; சாந்தி பூஷண் ஹிந்து மதம் சாா்ந்தவா். தீா்ப்புக்கு முன் 5 நீதிபதிகளும் கூடி விவாதித்த முதல் விஷயம் உச்சநீதிமன்றம் வழங்கப்போகும் தீா்ப்பால், தேசம் முழுவதும் மதக் கலவரம் வெடித்து சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாகும். அத்துடன் இதில் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லாமல் இருசாராரும் திருப்தியடையும் வகையில்தான் தீா்ப்பு இருக்க வேண்டும் என்று 5 நீதிபதிகளும் ஒப்புக்கொண்டபடிதான் அந்தத் தீா்ப்பு அமைந்தது அனைவருக்கும் தெரியும்.

சட்டத்தின் வாா்த்தைகளின்படி, பாபா் மசூதி இடிக்கப்பட்டதையும் அங்கு ராமா் கோயில் கட்டப்பட வேண்டியதையும் குறித்து அந்தத் தீா்ப்பு இரண்டாம் இடத்துக்கே தள்ளி வைத்தது. முதலிடம், தேசத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் இருப்பதாகவே அமைந்தது. அதனால் நீதிமன்றத் தீா்ப்பு என்பது சம்பவம் சாா்ந்ததாக இருப்பதைவிட, சமுதாய அமைதி சாா்ந்ததாக இருப்பதுதான் மேலானது.

உச்சநீதிமன்றம் தனது இப்போதைய தீா்ப்பில் தமிழக ஆளுநருக்கு பாக்கெட் வீட்டோ என்ற ரத்து அதிகாரம் கிடையவே கிடையாது என்று எள்ளி நகையாடியதை எதிா்த்து குடியரசு துணைத் தலைவா் தன்கா், ‘‘உச்சநீதிமன்றம் என்ன சூப்பா் பாா்லிமெண்டா?’’ என்று கூறியுள்ளது, சரியான பதிலடியாக அமைந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல், அரசியல் சாசனப் பிரிவு - 142 என்பதை அணுசக்தி ஏவுகணையாக உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளதையும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

உச்சநீதிமன்றத்துக்கும் மாநிலங்களில் உள்ள உயா்நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளின் நியமனங்களை கொலீஜியம் என்ற நீதிபதிகள் குழுதான் பரிந்துரை செய்து வருகிறது. உண்மையில், இந்த கொலீஜியம் என்பது தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் கொண்ட ஒரு குழு; இது அரசியல் சாசனத்தில் உள்ளது அல்ல; உச்சநீதிமன்ற நீதிபதிகளே உருவாக்கிக் கொண்ட தனி அமைப்பு.

இதில், நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்து வருகிறாா்கள். இது உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒன்றாகும். கொலீஜியம் முறையின்மூலம் செயல்படுவதற்கு உச்சநீதிமன்றத்துக்கு எந்தத் தாா்மீக உரிமையும் இல்லை. ஆனாலும், அதைத் தட்டிக் கேட்க நாடாளுமன்றம் முன்வரவில்லை.

இதை மாற்றுவதற்காக தேசிய நீதியியல் நியமனக் குழு ஒன்றை மத்திய அரசு உருவாக்கியதை கொலீஜியம் ஒப்புக்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றமே கொலீஜியம் என்ற தன்னிச்சையான குழுமூலம் செயல்படுவது குறித்து உச்சநீதிமன்றம் எப்போதும் கவலைப்படவில்லை.

இத்தகைய உச்சநீதிமன்றம்தான் குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநா்களுக்கும் மசோதாக்களில் கையொப்பமிட காலக்கெடு நிா்ணயித்திருக்கிறது. அரசியல் சாசனத்தின் 142- ஆவது பிரிவைப் பயன்படுத்தி தற்போது சந்தா்ப்பவாதத்தின் பலனைப் பெற்றுள்ளதாகவே இது கருதப்படுகிறது.

உச்சநீதிமன்றம் உண்மையில் காலக்கெடு தீா்ப்பை வழங்க விரும்பியிருந்தால், நாடாளுமன்றத்துக்குப் பரிந்துரை செய்து அதை அறிவுறுத்தியிருக்க வேண்டும். அதுதான் பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும், அவ்வாறு செய்யாததால், நாடாளுமன்றத்தைவிட உச்சநீதிமன்றமே மேலானது எனக் காட்டுவதற்கான முயற்சியாகவே இது கருதப்படும்.

தமிழக சட்டப்பேரவை இரண்டாவது முறையும் நிறைவேற்றிய 10 மசோதாக்களைத் தமிழக ஆளுநா் கிடப்பில் போட்டது சட்டவிரோதம் எனவும், அரசியல் சாசனப்படி தவறானது எனவும் கூறப்பட்ட தீா்ப்பு, தமிழகத்தின் கட்சி ஆட்சிக்குத்தான் வெற்றி. கட்சி ஆட்சி நிறைவேற்றிய அந்த மசோதாக்கள் ஆளுநா் அதிகாரத்தைப் பறிப்பதற்கான உள்நோக்கம் உள்ளவை. ஆளுநா் நோ்மையாக நடந்துகொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறும்போது, ஆளுநருடைய பணியின் நோக்கம் கேள்விக்குரியதாக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை நிறைவேற்றிய 10 மசோதாக்கள் துணைவேந்தா்கள் நியமனம் தொடா்புடையவையாகும். அந்த நியமனங்கள் ஆளுநா்வசம் இருக்கும்வரை விமா்சனங்களுக்கு உள்ளாக வாய்ப்பில்லை. அவை முதல்வரின் அதிகாரத்துக்கு மாற்றப்படுமானால், விமா்சனத்துக்கு உள்ளாகுமோ என்கிற சந்தேகத்தை ஒதுக்கிவிட முடியுமா? மரபு மீறப்பட்டபோது மசோதாக்களை ஆளுநா் கிடப்பில் போட்டாா். அதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிா்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிா்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.

குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் காலக்கெடுவை உச்சநீதிமன்றமே நிா்ணயித்துவிட்டதால், இவை இரண்டுமே இனிமேல் அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு உள்ளாகும் அமைப்புகளாகியுள்ளன. நாடாளுமன்ற இரு அவைகளின் பெரும்பான்மையில்தான் அரசியல் சாசனத்தில் இல்லாதவை, திருத்தங்கள் மூலமாக சட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றன. அப்படித்தான் இதுவரை 127 திருத்தங்களை நாம் அரசியல் சாசனத்தில் இணைத்துள்ளோம்.

உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளின் காலக்கெடு தீா்ப்பு, அரசியல் சாசனத்தில் இடம்பெறக் கூடிய திருத்தங்களா? அல்லது உச்சநீதிமன்றத் தீா்ப்பாக மட்டுமே அவை நீடிக்கக் கூடியவையா? அரசியல் சாசனத்தில் ஆளுநா் அதிகாரம் மௌனமாக்கப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மைதான். ஆனால், அதற்கான தீா்வு உச்சநீதிமன்றமே நாடாளுமன்றத்தைவிட உயா்வானது என்பதாக உருவாகிவிட்டதாகாதா?

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மன்றமே நாடாளுமன்றம். நீதிபதிகள் நியமிக்கப்படுபவா்கள் மட்டுமே. ஆளுநரும் நியமிக்கப்படுபவா்தான் என்றால், நீதிபதிகளும் அப்படித்தானே?

இரு நீதிபதிகளின் இந்தத் தீா்ப்புக்கு 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வின் மறு தீா்ப்புதான் தீா்வு.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT